அயோத்தியில் முஸ்லீம் தரப்புக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்க உத்தரவு ஏன்? உச்சநீதிமன்ற தீர்ப்பில் விளக்கம்
டெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம், இந்து தரப்பான ராம ஜன்மாபூமி அமைப்புக்கு உரிமையானது, என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான, 5 நீதிபதிகள் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. ஆனால், முஸ்லிம்களுக்கு அயோத்தியில் அவர்கள் தேர்ந்தெடுக்கக் கூடிய மற்றொரு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மசூதி அமைப்பதற்கு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
சர்ச்சைக்குரிய நிலத்தில் சன்னி வக்பு வாரியம் உரிமை கொண்டாட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்ட பிறகும், எதற்காக 5 ஏக்கர் நிலம் அவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற கேள்வி சிலரால் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வருவதையும் பார்க்க முடிகிறது.
ஆனால் இதற்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெளிவாக விளக்கவும் அளிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பின் அம்சங்களை பார்க்கலாம்:
கோவிலுக்கு ஒப்படைப்பு
சர்ச்சைக்குரிய நிலம் ஏன் கோவிலுக்கு ஒப்படைக்கப்படுகிறது? என்பது பற்றி தீர்ப்பில், ".. ஆதாரம் ... சர்ச்சைக்குரிய சொத்துக்கள் முழுவதற்கும் இந்து தரப்பு உரிமைகோருகிறது. முஸ்லிம் தரப்பும் கேட்கிறது. ஆனால் உடமை இந்து தரப்புக்கானது என்பதற்கு அதிக ஆதாரங்கள் உள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
5 ஏக்கர் நிலம்
தீர்பில் முஸ்லீம்களுக்கு எதற்காக 5 ஏக்கர் நிலம் வழங்கப்படுகிறது என்பதற்கும் விளக்கம் உள்ளது. "1949ம் ஆண்டு டிசம்பர் 22 அல்லது 23ம் தேதியில் மசூதியில் முஸ்லிம்கள் அகற்றப்பட்டனர். இறுதியில் 1992ம் ஆண்டு டிசம்பர் 6 அன்று மசூதி இடிக்கப்பட்டது. முஸ்லிம்கள் தானாக முன்வந்து, மசூதியை கைவிடவில்லை. மசூதியை இழந்த முஸ்லிம்களின் உரிமையை நீதிமன்றம் கவனிக்காவிட்டால் நீதி மேலோங்காது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி தீர்ப்பு, இந்திய அரசியல், சமூகத்தை கட்டமைக்கப்போகிறது.. அமெரிக்க ஊடகங்கள்
மசூதி
பாபர் மசூதியின் முழு அமைப்பும், அவர்கள் வழிபாட்டை நிறுத்தும் நோக்கத்தில் இடிக்கப்பட்டது. 450 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஒரு மசூதியை முஸ்லிம்கள், இழந்துவிட்டனர். பாபர் மசூதியை இடித்தது சட்டத்திற்கு எதிரானது.
சாத்தியம் இல்லை
மேலும், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி மூன்று வழிகளில் சொத்துக்களை பிரித்தல் சட்டப்படி முடியாதது. பொது அமைதியை பேணுவதற்கான ஒரு விஷயமாக இந்த தீர்ப்பு இருந்தாலும், உயர்நீதிமன்றத்தின் அந்த தீர்வு சாத்தியமில்லை. நிலத்தைப் பிரிப்பது எந்தவொரு தரப்பினரின் நலனுக்கும் அல்லது அமைதி மற்றும் அமைதியின் நீடித்த உணர்வுக்கு உறுதுணையாக இருக்காது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.