டெல்லியில் ஒரு திரில் கூட்டணி.. ஒரே குடையில் ஆம் ஆத்மி - காங்கிரஸ்?
டெல்லி: காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மியும் கூட்டணி வைத்து வடக்கில் தேர்தலை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க கட்சிகளின் காட்சிகள் மாறிவருகிறது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லையென்ற அறுதப் பழைய வசனத்தை வைத்துக் கொண்டு நேற்று வரை கடுமையாக விமர்சித்துக் கொண்டவர்களும் இன்று சிரித்துக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் சம்பவங்கள் தினம்தோறும் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே வரலாறு படைத்த கட்சி ஆம் ஆத்மி. குறைந்த காலத்தில் தேர்தலை சந்தித்து ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் காங்கிரஸ், பாஜக என இரு கட்சிகளையும் கலங்கடித்த சாதனையை வைத்துள்ளது.
ஆம் ஆத்மி கொள்கைகள்
ஆம் ஆத்மியின் கொள்கைகள் மீது மக்கள் நம்பிக்கை வைத்ததன் காரணமாக டெல்லியில் ஆட்சியை பிடித்த அக்கட்சி குறைந்த காலத்திலேயே அண்டை மாநிலங்களான பஞ்சாப், சண்டிகர் ஆகிய மாநிலங்களிலும் குறிப்பிடத் தக்க வாக்கு வங்கியை தனதாக்கியுள்ளது. இது கடந்த தேர்தலில் எளிதாக தெரிந்தது.
விஜயகாந்த்தை சந்தித்த சரத்குமார்.. நலம் விசாரிக்க மட்டும்தானா அல்லது.. பின்னணியில் தினகரனா ?
குறுக்கு சால் ஓட்டும் பாஜக
டெல்லியில் ஆளும்கட்சியாக உள்ள ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் அம்மாநில துணை நிலை ஆளுநருக்கும் எந்நாளும் ஏழாம் பொருத்தம்தான். மத்திய அரசு வழக்கம்போல தனது ஆட்சியில்லாத மாநிலங்களில் ஆளுனரை வைத்து குறுக்குசால் ஓட்டுவது போல டெல்லியிலும் ஓட்டி வருகிறது. இதற்கு டெல்லி மக்களும் மாநில அரசும் தங்களால் முடிந்தவரை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசை கடுமையாக எதிர்த்து வருகிறது.
கை கொடுக்கும் காங்கிரஸ்
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் மோடியின் எதிரிகளான இருவரும் எதிர்வரும் தேர்தலில் ஒன்றிணைய முடிவு செய்துள்ளனர். இதற்காக பேச்சு வார்த்தையும் இருதரப்பிலும் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை எட்டும்பட்சத்தில் டெல்லிக்கு மட்டுமல்லாது ஆம் ஆத்மி ஓரளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ள அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் சண்டிகார் ஆகிய மாநிலங்களிலும் கூட்டணி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.
பாஜகவுக்கு சவால்
இரு கட்சிகளுக்கு இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றுவருவதை காங்கிரஸ் கட்சி உறுதிப் படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி தரப்பிலும் இந்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதை உறுதிப் படுத்தியுள்ளனர். மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை எட்டி யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் என்ற தொகுதி உடன்பாடும் வெளியாக உள்ளது. ஆம் ஆத்மி -காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும் நிலையில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக கடுமையாக போராட வேண்டியிருக்கும்.
உ.பி யில் காங்கிரஸ் கட்சி, சமாஜ் வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளோடு போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் பாஜக இப்போது தலைநகர் டெல்லியிலும் கடுமையான போராட்டத்தை சந்திக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.