ம.பியில் பெரும் இழுபறிக்கு வாய்ப்பு.. வெல்லும் எம்எல்ஏக்களுக்கு காத்திருக்கு ஜாக்பாட்!
மத்திய பிரதேசத்தில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ, பாஜக நிலை சற்று பரிதாபம்தான் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில், ஏற்கனவே விவசாயிகள் பாஜக மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். 'வியாபம்' ஊழல் அனைவருக்கும் தெரிந்த சமாச்சாரம்தான்.
இருந்தாலும் அங்கு முதல்வர் சிவராஜ் சவுகான் மட்டுமே மக்களிடம் மிகவும் பிரபலமாக இருக்கிறார். காங்கிரசில் எப்பவுமே கோஷ்டி பஞ்சாயத்து வேறு. இது சம்பந்தமான பேச்சு நடக்கும்போதெல்லாம் ஒருமுறை கூட சுமூக முடிவு எட்டப்பட்டதில்லை.
விரட்டி அடிக்கலாம்
இதில் சத்தமே இல்லாமல் கடந்த 15 வருஷங்களில் ஒரு பக்கம் பகுஜன் சமாஜ் கட்சி ஓரளவுக்கு வளர்ந்து விட்டது என்றாலும் பகுஜன் சமாஜால் பாஜகவுக்கு ஈடு தர முடியாது என்றே ஆரம்பத்திலிருந்தே கூறப்பட்டது. அதே சமயத்தில், காங்கிரஸ் ஈடு கொடுத்து, பாஜகவை ஒரேயடியாக இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது திணறடிக்க முடியும் என்று கூறப்பட்டது. கூடவே காங்கிரசுடன் பகுஜன் சமாஜ் சேர்ந்து விட்டாலும் பாஜகவை ஒரேடியாக விரட்டி அடிக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வந்தனர்.
பெரும்பான்மை
இந்த நிலையில்தான், இங்கு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. அதன்படி 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவை என கூறப்படுகிறது.
இந்தியா டுடே
ஆஜ்தக் கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 102-ல் இருந்து 120 இடம் கிடைக்கலாம் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு 104-ல் இருந்து 122 வரை கிடைக்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டுடே கருத்துக்கணிப்பிலும் காங்கிரஸ் கட்சிக்கு 104 முதல் 122 இடம் கிடைக்கும் என்றும், பாஜகவுக்கு 102 முதல் 120 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இழுபறி நிலை?
ஏபிபி நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸுக்கு இங்கு 126 தொகுதிகள் கிடைக்குமாம். அதேசமயம், ஆளும் கட்சியாக உள்ள பாஜகவுக்கு 94 இடங்களே கிடைக்குமாம். காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், மத்தியபிரதேசத்தில் இழுபறி நிலை உண்டாகும் என இந்த கருத்து கணிப்புகள் தெளிவுபடுத்தி உள்ளன.