ஆர்டிஐ கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வருமா?.. நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருமா என்பது தொடர்பான வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருமா என்பது தொடர்பான வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டம் இந்தியர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறலாம். அரசு அமைப்புகள், சில தனியார் அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை குறித்த கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பதில் அளிக்கப்படும்.
ஆனால் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகள், பிரச்சனையை உருவாக்கும் கேள்விகள், ராணுவம் தொடர்பான கேள்விகளை இதன் மூலம் கேட்க முடியாது. இந்த சட்டத்தின் மூலம் நிறைய முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் இந்த சட்டத்திற்கு வலு இல்லாமல் போக செய்யவும் முயற்சிகள் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருமா என்று கேள்வி எழுந்தது.
2017ல் தகவல் அறியும் உரிமை சட்ட களப்பணியாளர் சுபாஷ் சந்திர அகர்வால் உச்ச நீதிமன்றம் தொடர்பான கேள்வி ஒன்றை ஆர்டிஐ மூலம் கேட்டு இருந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்துக்கள் குறித்த விவரம் வேண்டும் என்று அவர் தகவல் ஆணையத்திடம் கேட்டு இருந்தார். இதற்கு உச்ச நீதிமன்றம் பதில் அளிக்க மறுத்துவிட்டது.
இதையடுத்து சுபாஷ் மத்திய தகவல் ஆணையத்தை அணுகினார். இதற்கு தகவல் ஆணையம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வருகிறது. அதனால் சுபாஷுக்கு தேவையான தகவலை அளியுங்கள் என்று கூறியது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இதை ஒரு நீதிபதி அமர்வு டெல்லி ஹைகோர்ட்டில் விசாரணை செய்தது. அப்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அலுவலகமும் வரும், அதனால் சுபாஷ் கேட்கும் தகவலை கொடுக்கலாம் என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பிற்கு எதிராக முன்னாள் வழக்கறிஞர்கள் உட்பட 3 பேர் மேல்முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்றத்தில் இவர்கள் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். இதன் மீதான விசாரணை கடந்த மாதம் முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
இந்த நிலையில் நாளை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் என்வி ரமணா, டி.ஒய். சந்திரசூட் , தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குகிறார்கள். நாளை மதியம் 2.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.