அசத்தல்.. இந்தியாவில் 5ஜி செல்போன் சேவை அறிமுகம்.. அனைவருக்கும் அனுமதி.. ரவிசங்கர் பிரசாத் பேட்டி
டெல்லி: இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் சேவை, பரிட்சார்த்த முறையில் துவங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் செல்போன் சேவைகள் துறை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப இந்தியா தன்னை மாற்றிக் கொண்டு வருகிறது.
தற்போது 4ஜி தொழில்நுட்பத்தில் செல்போன்கள் இயக்கப்படும் காலகட்டம் வந்துள்ளது. 3ஜியை விடவும் இது வேகமான இணையதள வசதியை கொடுக்கிறது. இந்த நிலையில்தான் 5ஜி ஸ்பெக்ட்ரம் வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ரவிசங்கர் பிரசாத் இந்த தகவலை டெல்லியில் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனைத்து செல்போன் சேவை வழங்குனர்களுக்கும், வெள்ளோட்ட அடிப்படையில் 5ஜி சேவை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், சீனாவின் ஹுவாய் செல்போன் நிறுவனம் உள்ளிட்ட செல்போன் சேவை நிறுவனங்களுக்கும் 5ஜி சேவை வழங்குவதற்கான அனுமதி தரப்போகிறது என்று கூறப்பட்டுள்ளது.
ஹுவாய் நிறுவனம் இந்தியாவில் 5ஜி செல்போன் சேவையை செயல்படுத்த நீண்டகாலமாக அனுமதி கோரி வருகிறது. மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது, என்பது குறிப்பிடத்தக்கது.