லாக்டவுனை மேலும் 1 மாதத்துக்கு நீட்டிக்கலாம்.. ஒடிஷா முதல்வர் யோசனை.. ஆதரித்த முதல்வர்கள்
டெல்லி: நாடு முழுவதும் லாக்டவுனை நீட்டிக்க வேண்டும் என்று ஒடிசா, மேகாலயா உள்ளிட்ட 4 மாநில முதல்வர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் 27500க்கும் அதிகமான மக்களுக்கு பரவி உள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 2000 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனா பரவும் மிக அதிகமாக உள்ளது.
இதற்கிடையே கடந்த மார்ச் 25ம் தேதி அறிவிக்கப்பட்ட 21 நாட்கள் லாக்டவுன் ஏப்ரல் 14ம் தேதி முடிந்தது. இதையடுத்து மீண்டும் லாக்டவுன் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
ஊரடங்கு நீட்டிப்பு.. ஆனால் வேறு மாதிரி இருக்கும்.. முதல்வர்களுடனான மீட்டிங்கில் மோடி கூறியது என்ன?
கடைகளுக்கு அனுமதி
ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு கிராமப்புறங்களில், கொரோனா இல்லாத பகுதிகளில் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சில தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவின் ஒட்டுமொத்த பகுதியிலும் போக்குவரத்து முடங்கி உள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
பிரதமர் ஆலோசனை
இந்நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பரவும் வேகம் அதிகரித்துவரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்தும், லாக்டவுனை நீட்டிப்பது குறித்தும் அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் முறையில் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மேகாலயா, மிசோரம், புதுச்சேரி, ஜார்க்கண்ட், இமாச்சல பிரதேசம், ஒடிசா, பீகார், குஜராத் மற்றும் ஹரியானா ஆகிய மாநில முதல்வர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டனர்.
மேகாலயா முதல்வர்
அவர்களில் நான்கு மாநில முதல்வர்கள் லாக்டவுனை நீட்டிக்க கோரிக்கை வைத்தனர். குறிப்பாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் லாக்டவுனை அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதேபோல் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா , புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் லாக்டவுனை இன்னும் கொஞ்சம் நாட்கள் நீட்டிக்க ஆதரவு தெரிவித்தனர்.
முக்கிய செயல்பாடு
ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் லாக்டவுன் காலத்தில் பொதுவான விதிமுறைகள்- கட்டுப்பாடுகளை தேசிய அளவில் உருவாக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதார மறுசீரமைப்புக்கு உதவியாக இருக்கும். நிதி ஆயோக் என்பது வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும். தேசிய அளவில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டாலும் முக்கியமான செயல்பாடுகளை அனுமதிக்க வேண்டும் என்றார்.
லாக்டவுன் நீட்டிப்பா
இதற்கிடையே மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களின் முதல்வர்களும் லாக்டவுனை நீட்டிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் மாநில முதல்வர்களின் பேச்சுக்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு பின் பதில் அளித்து பிரதமர் மோடி பேசும் போது லாக்டவுனை நீட்டிக்கும் விவகாரத்தில் மே 3ம் தேதிக்கு பிறகு முடிவு எடுக்கலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது. எனவே மே 3ம் தேதி தான் லாக்டவுன் நீட்டிப்பா இல்லை என்பது தெரியவரும்.