ப. சிதம்பரத்திற்கு ஆகஸ்ட் 30ம் தேதி வரை காவல் நீட்டிப்பு.. சிபிஐ கோர்ட் அதிரடி உத்தரவு!
சிபிஐயால் கைது செய்யப்பட்டு இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை தற்போது டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் (ஆகஸ்ட் 30ம் தேதி வரை) விசாரிக்க சிபிஐக்கு அனுமதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கி உத்தரவிட்டது.
கடந்த வாரம் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டிற்குள் சுவர் எகிறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகள் ப. சிதம்பரத்தை கைது செய்தனர்.
இதையடுத்து டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் ப .சிதம்பரத்திற்கு பெயில் வழங்க முடியாது என்று கூறினார்.
காவல் அனுமதி
அதோடு ப. சிதம்பரத்தை ஐந்து நாள் காவலில் எடுக்கவும் அனுமதி வழங்கினார். இவர் கடந்த 5 நாட்களாக கடுமையாக விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவருக்கு வழங்கப்பட்ட காவல் இன்றோடு முடிகிறது. ஆனால் இந்த ஐந்து நாட்களில் சிபிஐ விசாரணைக்கு ப. சிதம்பரம் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுவும் தள்ளுபடி
சிபிஐ கேட்ட கேள்விகளுக்கு ப. சிதம்பரம் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ப.சிதம்பரத்தின் காவலை நீட்டிக்க சிபிஐ கோரிக்கை வைத்தது. இந்த சிபிஐ காவலுக்கு எதிராக ப.சிதம்பரம் ஏற்கனவே தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்தது.
விசாரணை
சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க முடியாது, ஜாமீனுக்கு வேண்டுமானால் சிபிஐ கோர்ட்டிலேயே மீண்டும் விண்ணப்பியுங்கள் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. அதையடுத்து தற்போது டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு சிபிஐ கோர்ட்டில் ப. சிதம்பரம் ஜாமீன் மனு விசாரணை நடந்தது .
என்ன வாதம்
இங்குதான் ஐஎன்எக்ஸ் வழக்கு நடந்து வருகிறது. ப. சிதம்பரம் முன் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் ஜாமீன் மனு மீது டெல்லி சிபிஐ கோர்ட்டில் விசாரணை நடந்தது. ப. சிதம்பரத்திற்காக கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார். அவர் அமலாக்கத்துறை முன் ஜாமீன் வழக்கில் வாதிட்டார். சிபிஐ நீதிமன்றத்தில் ப. சிதம்பரத்திற்காக அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல் இருவரும் வாதிட்டனர்..
என்ன கோரிக்கை
இதில் ப.சிதம்பரத்திற்கு 5 நாட்கள் காவலை நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ மனு தாக்கல் செய்தது. மேலும் இந்த வழக்கில் சிபிஐ சார்பாக ஆஜரான துஷார் மேத்தா, சிபிஐக்கு இந்த வழக்கில் புதிதாக நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அமலாக்கத்துறை எங்களிடம் நிறைய ஆதாரங்களை வழங்கி இருக்கிறது. அதை வைத்து அவரை விசாரிக்க வேண்டும் என்று கேட்டது.
எதிர்ப்பு
ஆனால் சிதம்பரத்திற்கு உடனடியாக பெயில் வழங்க வேண்டும் என்று கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டனர். என்ன ஆதாரம் இருக்கிறது என்று கூறுங்கள். நல்லபடியாக ஒரே ஒரு ஆதாரத்தை கொடுங்கள். நீங்கள் ஆதாரம் கொடுத்தால் பெயில் கேட்க மாட்டோம், என்று வாதிட்டனர். இரண்டு தரப்பும் சுமார் 30 நிமிடங்கள் வாதிட்டனர்.
என்ன உத்தரவு
இதையடுத்து ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் (ஆகஸ்ட் 30ம் தேதி வரை) விசாரிக்க சிபிஐக்கு அனுமதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கி உத்தரவிட்டது. நீதிபதி அஜய் குமார் சிபிஐ கோரிக்கையை ஏற்று ப.சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கினார். இதற்கு எதிராக ப. சிதம்பரம் தரப்பு உச்ச நீதிமன்றம் செல்ல வாய்ப்புள்ளது.