கொரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதை தேர்ந்தெடுக்கும் - மோடியை கேட்கும் ராகுல்காந்தி
கொரோனா தடுப்பூசிகளில், எந்த நிறுவனத்தின் தடுப்பூசியை மத்திய அரசு தேர்ந்தெடுக்கும். யார் யாருக்கெல்லாம் தடுப்பூசி முதலில் கிடைக்கும் என்று ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி: பல்வேறு கொரோனா தடுப்பூசிகளில், எந்த நிறுவனத்தின் தடுப்பூசியை மத்திய அரசு தேர்ந்தெடுக்கும். யார் யாருக்கெல்லாம் தடுப்பூசி முதலில் கிடைக்கும். அதை மக்களிடம் விநியோகிக்க, மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகம் முழுவதும் 6 கோடி பேரை தொட்டுப்பார்த்துள்ளது கொரோனா வைரஸ். 5 கோடி பேர் வரை குணமடைந்துள்ளது நம்பிக்கையை அளித்தாலும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை கொரோனா பற்றிய அச்சம் உலகம் முழுவதும் நீடித்துக்கொண்டுதான் இருக்கும்.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலைக்கு வாய்ப்பு இருப்பதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தடுப்பூசி கண்டுபிடிக்க பல நிறுவனங்கள் போட்டி போட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த பிபைசர் நிறுவனம், தனது கொரோனா தடுப்பூசி 95 சதவீத செயல்திறனுடன் இருப்பதாக கூறியுள்ளது. அதை அவசரமாக பயன்படுத்த ஒப்புதல் கோரி, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளது.
நல்ல செய்தி.. மத்திய அரசுக்கு 50% விலையில் ஜன-பிப்ரவரியில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கலாம்!
மற்றொரு அமெரிக்க நிறுவனமான மாடர்னா, தனது தடுப்பூசி 94.5 சதவீத செயல்திறனுடன் இருப்பதாக கூறியுள்ளது. விரைவில் ஒப்புதல் கேட்டு விண்ணப்பிக்க உள்ளது.
அதுபோல், இந்தியாவில், ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் தடுப்பூசி, மூன்றாம் கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. பாரத் பயோடெக், ஐ.சி.எம்.ஆர். இணைந்து தயாரித்த 'கோவாக்சின்' தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனை தொடங்கி உள்ளது. ஜைடஸ் கடிலா தடுப்பூசியின் 2ஆம் கட்ட பரிசோதனை முடிவடைந்துள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் 2 மற்றும் 3ஆம் கட்ட பரிசோதனை விரைவில் தொடங்குகிறது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு ஏற்கனவே கூறியிருந்தது. இந்த நிலையில், 3ஆம் கட்ட பரிசோதனை நிலுவையில் இருக்கும்போதே, கொரோனா தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி டுவிட்டர் பக்கத்தில், பல்வேறு கொரோனா தடுப்பூசிகளில், எந்த நிறுவனத்தின் தடுப்பூசியை மத்திய அரசு தேர்ந்தெடுக்கும். யார் யாருக்கெல்லாம் தடுப்பூசி முதலில் கிடைக்கும். அதை மக்களிடம் விநியோகிக்க, மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது. மக்களுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்க, 'பி.எம். கேர்ஸ்' நிதி பயன்படுத்தப்படுமா. நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி சென்று சேர, எவ்வளவு கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படும் என பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை அதில் பதிவிட்டுள்ளார்.