மோடிக்கு எதிராக பிரியங்காவை நிறுத்துமா காங்கிரஸ்.. கருத்துக் கணிப்பில் பரபர முடிவு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தியை நிறுத்த வேண்டும் என்று மக்கள் பெருமளவில் விரும்புவதாக ஏபிபி நியூஸ் - சிவோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
இந்தக் கருத்து வாக்காளர்களிடையே மட்டுமல்லாமல், காங்கிரஸாரிடமும் இருப்பதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்தான் தீவிர அரசியலுக்கு வந்தார் பிரியங்கா காந்தி. உ.பி. கிழக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும் அவருக்கு உடனடியாக பதவி தரப்பட்டது.
இந்த நிலையில் அவர் எங்கு போட்டியிடலாம், அவரால் மோடிக்கு ஆபத்தா என்பது குறித்து ஏபிபி நியூஸ் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. கடந்த 2014 தேர்தலில் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் நிறுத்தப்பட்டு படு தோல்வி அடைந்தார்.
60% ஆதரவு
வாரணாசியில் மோடிக்கு எதிராக பிரியங்காவை நிறுத்தலாமா என்ற கேள்விக்கு கிடைத்த பதில்கள். கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 60 சதவீதம் பேர் பிரியங்காவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அது ரிஸ்க்
32 சதவீதம் பேர் அது புத்திசாலித்தனமான முடிவாக இருக்காது என்று கூறியுள்ளனர். 8 சதவீதம் பேர் கருத்துக் கூற விரும்பவில்லை.
ரேபரேலியில் போட்டியிடுவாரா
பிரியங்கா காந்தி தற்போது ரேபரேலி தொகுதியில் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அங்கு தற்போது எம்பியாக இருப்பவர் சோனியா காந்தி. அமேதியில் ராகுல் காந்தி உறுப்பினராக உள்ளார். இந்த இரண்டு தொகுதிகளுமே உ.பி கிழக்கில்தான் உள்ளன.
எங்கு போட்டியிடுவார்
அதேபோல பிரதமர் மோடியின் வாரணாசி, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் ஆகியவையும் இதே பிராந்தியத்தில்தான் உள்ளன. பார்க்கலாம், காங்கிரஸாரின் விருப்பத்தை கட்சி மேலிடம் நிறைவேற்றுமா என்பதை.