"வெங்காயம், கல்லுப்பூ".. புதுவையில் சூப்பர் செல்பி.. கலக்கும் ராகுல்.. தனித்து போட்டியிடுமா காங்?
டெல்லி: முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ராகுல் காந்திக்கு தமிழக மக்கள் மீது பாசம் ஏற்பட்டுள்ளது. இதை கடந்த இரு மாதங்களாக அவர் வெளிப்படுத்தி வருகிறார். இந்த பாச பிணைப்புகள் வாக்குகளாக மாற ஏதேனும் வழியிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
கருணாநிதி இருக்கும் போது தேர்தல் பிரச்சாரங்கள், கருணாநிதிக்கான விழாக்கள் உள்ளிட்டவைகளில் கலந்து கொள்ள ராகுல்காந்தி எத்தனையோ முறை தமிழகம் வந்துள்ளார்.
ஒகி புயல் காலத்திலும் தமிழக மக்களை சந்தித்துள்ளார். ஆனால் தற்போது காட்டும் பாசமழையை அவர் காட்டினாரா என்றால் அந்தளவுக்கு இல்லை என்பதுதான் உண்மை.
பந்தா இல்லாத ராகுல்
கடந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழகம் வந்த ராகுல் காந்தி ஏழை எளிய மக்களுடன் எந்த வித பந்தாவும் இன்றி எளிமையாக சாப்பிட்டார். அப்போது யாருடைய இலையாவது காலியாக இருந்தால் அவர்களுக்கு என்ன வேணும் என கேளுங்கள் என பரிமாறுவோரிடம் சுட்டிக் காட்டினார். அது போல் ஜனவரி மாதத்தில் கடைசி வாரம் கோவை வந்தார் ராகுல்.
காளான் பிரியாணி
அப்போது ஒரு பேக்கரியில் நுழைந்து டீ குடித்தார். அப்போது Village cooking Channel எனப்படும் யூடியூப் சேனலின் சமையல் நிகழ்ச்சியில் ராகுல் கலந்து கொண்டு காளான் பிரியாணியை செய்ய உதவியதோடு ஓலைப்பாயில் அமர்ந்து ஒரு ருசி பார்த்தார். மேலும் பிரியாணிக்கான ரைத்தா செய்யும் போது வெங்காயம், தயிர், கல்லுப்பூ என தனக்கு தெரிந்த அழகு தமிழில் கூறிய ராகுல் அவற்றை ஒன்றாக கலக்கி ருசி பார்த்தார்.
சிறுமியுடன் செல்பி
கரூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்த போது சிறுமி ஒருவர் செல்பி எடுக்க வந்த சிறுமி தனது பிரச்சார வேனில் ஏற முற்பட்ட போது அந்த சிறுமிக்கு கை கொடுதது தூக்கினார். அப்போது அவரது ஆடை சற்று விலகியது. இதை கண்ட ராகுல் யாரும் பார்ப்பதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு தாயை போல் சரி செய்து விட்டு அந்த சிறுமியுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
காங்கிரஸ் தலைவர்கள்
பிரச்சார வாகனங்களில் காங்கிரஸ் தலைவர்கள் யாருடன் அமர்ந்தாலும் தான் ஒரு கட்சியின் முன்னாள் தலைவர் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல் வாகனத்தின் மீது அமர்ந்து வந்தார். அது போல் நேற்றைய தினம் புதுவையில் கல்லூரியில் மாணவிகளுடன் உரையாற்றினார். அப்போது அவர் ஒரு மாணவி ஆட்டோகிராப் கேட்டார்.
எளிய ராகுல்
அவர் ஆட்டோகிராப் போட்டுக் கொண்டிருக்கும்போதே பரவசமடைந்த மாணவி ஆனந்த கண்ணீர் விட்டார். உடனே அவரை கட்டி அணைத்து தேற்றினார். அந்த மாணவியுடன் கைகுலுக்கி அவரை மேலும் மகிழ்ச்சிப்படுத்தினார். இது போன்ற செயல்களால் ராகுல் காந்தி தான் எளிமையானவர் என்பதை தமிழக மக்களுக்கு காட்டுவதாகவே பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ்
எளிமை என்பது ராகுலின் கூடவே பிறந்த குணமாகக் கூட இருக்கலாம். அதை இப்போது காட்ட வேண்டிய அவசியம் என்ன என நீங்கள் கேட்பது புரிகிறது. அதாவது தான் எத்தனை எளிதாக அணுகக் கூடியவர் என்பதை எளிய மக்கள் புரிந்து கொள்ளவே ராகுல் தனது குணத்தை வெளிப்படுத்துவதாக கூறுகிறார்கள். கடந்த ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் 40 இடங்களில் போட்டி காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
செல்வாக்கு
இந்த முறை கொடுக்கும் இடங்களில் 90 சதவீத இடங்களிலாவது காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்பது ராகுலின் எண்ணமாக உள்ளது. இதற்காக தமிழகத்தில் தனக்கென செல்வாக்கை உருவாக்கி அதை வாக்குகளாக மாற்ற முயற்சிப்பதாகவே கருதப்படுகிறது. இதன் மூலம் தனித்து போட்டியிடவோ அல்லது தங்கள் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலைக்கோ கட்சியை உயர்த்த திட்டமிடுகிறார். மேலும் இந்த நற்பெயர் வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கும் 2026ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கும் நிச்சயமாக உதவும் என்பது ராகுலின் கணக்கு.
மீண்டும் மலர
அது மட்டுமல்லாமல் தற்போதைய நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்தாலும் இன்னும் ஒரு சில மாதங்களில் புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் தனது எளிமை, எளிதில் அணுகும் தன்மை, ஏழை எளிய மக்களுடன் பழகும் விதம் ஆகியவை புதுவையில் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் மலர உதவி செய்யும் என்பதே ராகுலின் திட்டமாக இருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.