இந்தியா முன்னுதாரணமாக மாறப்போகிறது.. நாட்டு மக்களுக்கு மோடி அதிரடி கடிதம்.. தொழிலாளர் பற்றி உருக்கம்
டெல்லி: நரேந்திர மோடி தலைமையில், பாஜக கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த, முதலாவது ஆண்டு நிறைவு தினம் மே 30ம் தேதியான இன்று அக்கட்சி தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
Recommended Video
பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ அரசு முதன்முதலில் 2014 மே 26 அன்று ஆட்சிக்கு வந்தது. பின்னர், கடந்த 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது, மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அந்த தேர்தலில், பாஜக மகத்தான வெற்றியைப் பெற்று பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் மோடி.
பாஜக ஆட்சிக்கு வந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அனைத்து முன்னணி பத்திரிகைகளில் வெளியாகும் வகையில் ஒரு கடிதத்தை பிரதமர் மோடி எழுதியுள்ளார்.
பிரதமர் மோடி தனது கடிதத்தில், ஒரு வருடத்திற்குள் தனது அரசு எடுத்த பல்வேறு பணிகளை விவரித்துள்ளார். கொரோனா பிரச்சினையால் ஏழைகள் படும் கஷ்டங்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில் மோடி என்ன கூறியுள்ளார். வாருங்கள் பார்க்கலாம்:
மருத்துவ நிபுணர் குழுவுடன் மீண்டும் முதல்வர் இன்று ஆலோசனை.. தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு பற்றி முடிவு?
கடுமையான பாதிப்பு
இதுபோன்ற ஒரு மோசமான நோய் பாதிப்பு காலகட்டத்தில் எவரொருவரும் துன்பம் அடைய வில்லை என்று கூறிவிடமுடியாது. நமது தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், சிறு குறு தொழில் நடத்துவோர், தள்ளுவண்டி வியாபாரிகள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள்.
பேரிடராக மாறவில்லை
அதே நேரம் இதுபோன்ற சிக்கல்கள், துன்பங்கள் போன்றவை பேரிடராக மாறிவிடாமல் தடுப்பதற்கான போதிய கவனத்தை அரசு செலுத்தி வருகிறது. நமது நாடு நிறைய சவால்கள் மற்றும் சிரமங்களை சந்தித்து வருகிறது. இதற்காகத்தான் நான் இரவு பகலாக உழைத்து வருகிறேன். என்னிடம் வேண்டுமானால் குறைபாடுகள் இருக்கக்கூடும். ஆனால் நமது நாட்டில், இல்லை என்று எதுவுமே இல்லை. நான் உங்களை நம்புகிறேன். உங்கள் பலம், உங்கள் சக்தி ஆகியவற்றை நான் ரொம்பவும் நம்புகிறேன். என்னை விடவும் உங்களை அதிகம் நம்புகிறேன்.
சுய சார்பு பொருளாதாரம்
சுயசார்பு பொருளாதாரம் என்பதுதான் நமது இலக்கு. ஒரு பெரும் தொற்றுநோய் காரணமாக கண்டிப்பாக இது நெருக்கடியான காலம்தான். ஆனால் இந்தியர்களான நமக்கு இது ஒரு உறுதியான தீர்வு காணும் நேரம். 130 கோடி மக்களின் தற்போதைய மற்றும் எதிர்காலம் ஒரு துன்பகரமான சூழ்நிலையால் வழி நடத்தப்படாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
பொற்காலம்
இந்திய ஜனநாயகத்தின் பொற்காலம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் துவங்கியது. பல தசாப்தங்களுக்கு பிறகு இந்த நாடு முழு அறுதி பெரும்பான்மையுடன் ஒரு கட்சியை மீண்டும் ஆட்சிக்கு தேர்ந்தெடுத்த நாள் இது. வழக்கமான நாட்களாக இருந்திருந்தால் நான் உங்களோடு இந்த நேரத்தில் இருந்து இருப்பேன். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலை அதற்கு அனுமதிக்கவில்லை. எனது இந்த கடிதத்தின் வாயிலாக உங்கள் ஆசீர்வாதத்தை எதிர்பார்த்து இருக்கிறேன்.
ஊழல் கிடையாது
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஊழல் இல்லாத ஒரு ஆட்சியை கொடுத்து வருகிறோம். நிர்வாக சீர்கேடு மற்றும் சிவப்பு நாடா போன்ற மந்தமான பணிகளுக்கு இங்கு இடம் கிடையாது. இந்தியாவின் பெருமை குறிப்பிடத்தக்க அளவுக்கு வளர்ந்துள்ளது. 2016ஆம் ஆண்டு சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தி தீவிரவாத முகாம்கள் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே அழித்தோம். 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டுக்குள் உள்ள தீவிரவாத முகாம்கள் விமானப்படையால் குண்டு வீசி தகர்க்கப்பட்டன.
சாதனைகள்
2019ஆம் ஆண்டு தேர்தலின்போது எங்களை மறுபடியும் மக்கள் தேர்ந்தெடுத்தது அதே பணிகளை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. புதிய உயரங்களைத் தொட வேண்டும் என்பதற்காகவும்தான். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம் இந்திய நாட்டின் ஒற்றுமை மேலும் உறுதி செய்யப்பட்டது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த அயோத்தி ராமர் கோயில் வழக்கு விரைவாக நடத்தி முடிக்கப்பட்டது. முத்தலாக் போன்ற மோசமான நடைமுறை ஒழிக்கப்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தேசிய அளவில் நடைபெற்ற போராட்டங்கள் இந்திய நாட்டின் பன்முகத் தன்மைக்கு ஒரு உதாரணம்.
ஒற்றுமை
கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் பரவியபோது, இந்த உலகத்திற்கு இந்தியா பிரச்சனையாக மாறும் என்று பலரும் பயந்தனர். ஆனால் இன்று நம்மை உலகம் பார்க்கும் விதத்தை மாற்றியுள்ளோம். உலகின் பணக்கார மற்றும் செழிப்பான நாடுகளை விடவும் நமது நாடு எதிலும் குறைந்ததில்லை என்பதை உங்களது அனைவரின் ஒற்றுமை மற்றும் பலம் மூலம் நிரூபித்து விட்டீர்கள்.
நாட்டுக்கே முன்னுதாரணம்
நோயை கட்டுப்படுத்துவதில் எப்படி முன்னுதாரணமாக மாறினோமோ, அதுபோல, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் உலகிற்கே நாம்தான் முன் உதாரணமாக மாறப்போகிறோம். கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான இந்த யுத்தத்தின்போது நீங்கள் ஒற்றுமை மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றை காப்பாற்றி, "ஒரே நாடு, சிறந்த நாடு" என்பதை நிரூபித்துக் காட்டி விட்டீர்கள். இவ்வாறு நரேந்திர மோடி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.