கர்நாடகாவில் திருப்பம்.. எடியூரப்பா முதல்வராவதில் சிக்கல்? அமித்ஷாவுடன் பாஜக குழு திடீர் சந்திப்பு
Recommended Video
டெல்லி: கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராவதில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை, கர்நாடக பாஜக குழு இன்று டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் இருந்து 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கடந்த செவ்வாய்க்கிழமை குமாரசாமி அரசு கவிழ்ந்தது.
105 உறுப்பினர்கள் பலத்தை சட்டசபையில் காண்பித்து தற்போதைய சட்டசபையில் தாங்கள்தான் பெரும்பான்மை என்பதை நிரூபித்தது பிஜேபி. இதையடுத்து வியாழக்கிழமையான இன்று எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக தலைமை வேறு திட்டம் வைத்து உள்ளதாக தெரிகிறது.
இரு விஷயங்கள்
இரு விஷயங்கள் காரணமாக எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்க முடியாமல் இருக்கிறார். ஒன்று அவரது வயது மூப்பை காரணம் காட்டி வேறு ஒருவருக்கு முதல்வர் பதவியை தருவதற்கு பாஜக தலைமை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மற்றொன்று சபாநாயகர் ரமேஷ்குமார் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கிறாரா என்பதை பார்த்து கொண்டு, அதன் பிறகு ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் என்பதாகும்.
அமித்ஷா
இந்த நிலையில்தான் முன்னாள் முதல்வரான ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான பாஜக குழு ஒன்று டெல்லிக்கு சென்று பாஜக தேசியத் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
ஒரே சமுதாயம்
ஜெகதீஷ் ஷெட்டர், எடியூரப்பாவை போலவே லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர். எடியூரப்பாவுக்கு மாற்றாக முன்பு முதல்வர் பதவியில் அமர வைக்கப்பட்டவர்தான் ஜெகதீஷ் ஷெட்டர். இந்த நிலையில் அமித்ஷாவுடன் ஜெகதீஷ் ஷெட்டரின் சந்திப்பு எடியூரப்பா ஆதரவாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எடியூரப்பா செல்வாக்கு
கர்நாடக பாஜகவில் எடியூரப்பாவுக்கு தனி செல்வாக்கு உள்ளது. தலைமையுடன் முன்பு ஒருமுறை மோதல் ஏற்பட்டு, கர்நாடக ஜனதா என்ற பெயரில் கட்சி துவங்கி ஓராண்டுக்குள் 10 சதவீத வாக்குகளை சட்டசபை தேர்தலில் பெற்று, தனது செல்வாக்கை காண்பித்தவர் எடியூரப்பா. இப்போதும் எடியூரப்பாவுக்கு எதிராக தலைமை காய் நகர்த்தினால், அது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, இந்த நடவடிக்கைகள், கர்நாடக அரசியலில் இது திருப்பத்தை உருவாக்கியுள்ளது.