எம்எல்ஏ-க்களின் ராஜினாமா மீது முடிவெடுக்க கர்நாடக சபாநாயகருக்கு காலக்கெடு இல்லை.. உச்சநீதிமன்றம்
Recommended Video
டெல்லி: கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் அளித்த ராஜினாமா கடிதம் மீது முடிவெடுக்க சபாநாயகருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
எனினும் நியாயமான காலவரையறைக்குள் 15 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ராஜினாமா விவகாரத்தில், சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தங்களது ராஜினாமாவை சபாநாயர் ஏற்க மறுத்ததை எதிர்த்து, கர்நாடக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 15 பேர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் - மஜத கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் கூட்டணி ஆட்சியில், அதிகார போட்டி மற்றும் அமைச்சர் பதவிகள் தரப்படாததை காட்டி ஏராளமான முறை கலக குரல் வெடித்தது. எடியூரப்பா தலைமையிலான பாஜக-வும் ஆபரேஷன் தாமரையை மூன்றுக்கும் மேற்பட்ட முறை கையில் எடுத்தும், வெற்றி காண இயவில்லை.
இந்நிலையில் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்ததை அடுத்து மீண்டும் ஆபரேஷன் தாமரை கர்நாடகத்தில் துவங்கியதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக அமைச்சர் பதவி, முக்கிய இலாகா ஒதுக்கீடு செய்யவில்லை என்ற அதிருப்தி காரணமாக காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
மேலும் 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இவர்களின் ராஜினாமாவை ஏற்றால் கர்நாடகத்தில் நடைபெற்று வரும் கூட்டணி ஆட்சி நிச்சயம் கவிழும் என்பதால் அவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்க மறுத்துவிட்டார்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்ற படியேறினர் 15 எம்எல்ஏ-க்கள. இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள், கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது அரசியல் சாசனம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை 16-ம் தேதியான நேற்றைக்கு ஒத்தி வைத்திருந்தனர்
நேற்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அதிருப்தி எம்எல்ஏக்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, எம்எல்ஏக்கள் சிலரின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ராஜினாமா மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறேன் என சபாநாயகர் கூறுகிறார்.
அதற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. எம்எல்ஏக்கள் கொடுத்துள்ள ராஜினாமா மீது சபாநாயகர் உடனடியாக முடிவெடுக்க உத்தரவிட வேண்டும் என்றார். பின்னர் வாதிட்ட சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, நீதிமன்றங்கள் சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்பது தான் சட்டம். சபாநாயகர் பதவி அரசியலமைப்பு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டது. விதிமுறைகளின் படி சபாநாயகர் செயல்படும்போது, அவரின் செயல்பாட்டில் நீதிமன்றம் தலையிட முயற்சிப்பது சரியல்ல என வாதிட்டார்.
இரு தரப்பினரும் மாறி மாறி பல காரசாரமான வாதங்களை முன்வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, எம்எல்ஏ-க்கள் ராஜினாமா விவகாரத்தில் 2 பக்கமும் நியாயம் உள்ளதாக கூறினர். இரு தரப்புக்கும் பாதகமில்லாத உத்தரவைத்தான் பிறப்பிப்போம் என கூறி தீர்ப்பை இன்று காலைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில் ராஜினாமா கடிதம் மீது முடிவெடுக்க கர்நாடக சபாநாயகருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது,