மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி பேக்கேஜ்.. மக்கள் ஒவ்வொருவருக்கும் பலன் கிடைக்குமா? இதை செய்யனும்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களிடம் ஆற்றிய உரையின்போது. 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிதி பேக்கேஜ் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இது ஏற்கனவே, ரிசர்வ் வங்கி அறிவித்த சில நிதி சலுகைகள், நிதியமைச்சர் அறிவித்த நிதி பேக்கேஜ், உள்ளிட்டவற்றை சேர்த்துதான் என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது.
Recommended Video
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் என்ற அளவுக்கு இந்த பேக்கேஜ் மதிப்பு இருக்கிறது என்று மோடி நினைவுபடுத்த தவறவில்லை. இந்த நிதி பேக்கேஜ் யார் யாருக்கு உதவி செய்யும்? எப்படி பொருளாதாரத்தை உயர்த்த உதவும்? பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு என்ன வழி? என்பது பற்றி பொருளாதார வல்லுநர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
சுமார் 43 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவை படிப்படியாக தளர்த்தும் முடிவு என்பது, முழுக்க மத்திய அரசு சார்ந்ததாக இருந்ததே தவிர, மாநிலங்கள் கருத்து முழுமையாக ஏற்பட்டதா என்பது தெரியவில்லை.
60% வேட்பாளர்களை அடையாளம் கண்டுகொண்ட ஸ்டாலின்... காணொலி மூலம் மினி பட்டியல் தயார்..!
அதிகரித்த பாதிப்பு
ஊரடங்கு காலத்திலும் 50 சதவீதம் அளவுக்கு வைரஸ் பரவல் அதிகரித்து இருந்தது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதன் மூலம் நாடு முழுக்க ஒரே மாதிரியான விதிமுறைகளை விதித்தால், அதற்கு பலன் கிடைக்காது என்பது தெளிவாக தெரிகிறது. அந்தந்த மாநிலங்களில், அந்தந்த பிராந்தியங்களில் நிலவரத்தை அறிந்து முடிவெடுக்க அனுமதித்திருக்க வேண்டும் என்கிறார்கள் சில நிபுணர்கள்.
இரு நகரங்கள்
மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கி இருந்தால், முழுமையாக இந்த வைரஸ் பாதிப்பை தடுத்து இருக்க முடியுமா என்பதை உறுதியாக கூற முடியாதுதான். ஆனால் இப்போது இருக்கக்கூடிய, இந்த அளவுக்கு மோசமான நிலைமைக்கு போய் இருக்காது என்பது மட்டும் நிச்சயம் என்று கூறுகிறார்கள் மருத்துவ வல்லுனர்கள். பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங், பிரதமர் மோடியுடனான, வீடியோ கான்பரன்ஸ் ஆலோசனையின் போது லூதியானா மற்றும் ஜலந்தர் ஆகிய தொழில் நகரங்களில் தொழில் நடவடிக்கைகளை தொடங்குவதற்கு அனுமதி தருமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டார். இந்த இரண்டுமே மத்திய அரசால் சிவப்பு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டவை.
பஞ்சாப் நிலவரம்
வடமேற்கு மாநிலங்கள் பலவும், பஞ்சாப் போல தொழில் மற்றும் விவசாய துறையில் செழிப்படைந்த மாநிலங்கள் கிடையாது. எனவே, சுற்றியுள்ள பல மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், பஞ்சாப் மாநிலத்திற்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். சுமார் 13 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பஞ்சாபில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். தொழில் நிறுவனங்கள் என்பது பஞ்சாப் மாநிலத்தின் ஜீவநாடி. வேலைவாய்ப்பு இல்லாமல் அந்த தொழிலாளர்கள் என்ன செய்வார்கள் என்ற ஆதங்கம் முதல்வர் அமரீந்தர் சிங்கிடம் இருந்தது. ஆனால் இந்தக் கள நிலவரம் அமரிந்தர் சிங்கிற்கு தெரிந்த அளவுக்கு மத்திய அரசில் உள்ளவர்களுக்கு தெரியுமா என்பதுதான் கேள்விக்குறி.
மாநிலங்கள் கோரிக்கை
இதேபோலத்தான் மற்றொரு பக்கம் மும்பை நகரின் ஜீவ நாடியான புறநகர் ரயில் சேவையை துவங்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மோடியிடம் வேண்டுகோள் வைத்தார். கேரள மாநிலத்தில் இரட்டைத் தலைவலி. உள்மாநிலத்தில் பெரிய அளவுக்கு உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகள் இல்லாதது ஒரு பக்கம் என்றால், வளைகுடா நாடுகளிலிருந்து சொந்த மாநிலம் திரும்பிய மலையாள மக்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மற்றொரு பக்கம். எனவே, மாநிலத்தின் கடன் வாங்கும் அளவு என்பது அதிகரிக்கப்பட வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்தார்.
தனித்தனி பிரச்சினை
நிலைமை இப்படி இருக்கும்போது ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களுக்கு என்ன தேவை, எவ்வளவு நிதி உதவி அவசியம் என்பதை புரிந்து கொண்டு நிதி ஒதுக்குவது மட்டுமே என்ற பிரச்சனையிலிருந்து மீண்டு வருவதற்கு உதவும். மற்றபடி, மத்திய அரசு மத்திய பட்ஜெட்டில் ஒதுக்குவதை போல பொதுவான நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டால் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தனித்தனி பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் போகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
தொழிலதிபர்களுக்கு ஊக்கம்
தொழில்துறையினர், பெருமுதலாளிகள் ஆகியோரை ஊக்குவித்தால் அதிகப்படியான தொழிற்சாலைகள் தொடங்கப்படும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று நினைக்கிறது மத்திய அரசு. ஆனால் இந்த விஷயத்தில் மாநிலங்களின் நிலைப்பாடு என்பது வேறாக இருக்கிறது. விவசாயத்திற்கும், தொழிலாளர்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என நினைக்கின்றன சில மாநிலங்கள். ஏற்கனவே ஊழியர்களுக்கு குறைந்த சம்பளமும், முதலாளிகளுக்கு அதிக லாபமும் கிடைக்கும் நிலைதான் இந்தியாவில் உள்ளது. எனவேதான் நாட்டில் பணப்புழக்கம் குறைவாக இருந்தது. இப்போது வைரஸ் பிரச்சனையை காரணம் காட்டி ஊழியர்களின் பணி நேரத்தை 12 மணி நேரங்களாக அதிகரிக்கும் திட்டம் இருப்பதாக வேறு கூறப்படுகிறது.
பணப் புழக்கம்
பலர் சம்பளமும் குறைக்கப்பட்டுள்ளது. இப்படி தொழிலாளர்கள் நடத்தப்படும்போது, அவர்கள் கையில் பணம் இல்லாமல் எப்படி பொருட்களை வாங்குவார்கள். நிறுவனங்கள் தொழில் தொடங்கினால் என்ன பலன் கிடைக்கும்? மக்களிடம் பணப் புழக்கம் இல்லாவிட்டால், நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வர மாட்டார்கள் என்பது மற்றொரு கோணமாக இருக்கிறது.
அதிகாரப் பரவல்
எனவே, அனைத்து தரப்பையும் திருப்தி செய்யும் அளவுக்கான அதிகாரப் பரவல் என்பது இந்த நேரத்தில் மிகவும் அவசியமே தவிர, மத்திய அரசு மட்டுமே நிதி ஒதுக்கீட்டை செய்வதோ, பிற முக்கிய அறிவிப்புகளை அறிவிப்பதும், இதுபோன்ற முன்னெப்போதும் கண்டிராத பிரச்சினைக்கு தீர்வாக அமைய முடியாது. மாநிலங்களின் கைகளுக்கு நிதி சேர வேண்டும் என்கிறார்கள். அந்த ஒன்றை மத்திய அரசு செய்தால் மட்டுமே மக்கள் ஒவ்வொருவருக்கும் பலன் கிடைக்கும் என்கிறார்கள், பொருளாதார வல்லுனர்கள்.