மகாராஷ்டிராவில் பரவும் புதிய வகை கொரோனா.. தடுப்பூசிக்கு கட்டுப்படுமா? எய்ம்ஸ் இயக்குநர் விளக்கம்
டெல்லி: இந்தியாவில் தற்போது கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வகைகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ள எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, இது குறித்துக் கூடுதல் ஆய்வுகள் தேவை என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட நாட்டில் சில பகுதிகளில் கொரோனா பரவல் மோசமடைந்துள்ளது. மேலும். சில மாநிலங்களில் பிரிட்டன் மற்றும் பிரேசில் நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பரவலும் அதிகரித்துள்ளது. அதேபோல சுகாதார ஊழியர்கள் உட்பட முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் பலனளிக்குமா என்பதில் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் உருமாறிய கொரோனாவை தடுப்பூசிகள் எந்தளவு தடுக்கும் என்பது குறித்து பல்வேறு புதிய தகவல்களை எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா பகிர்ந்துள்ளார்,
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லை- இந்தி, சமஸ்கிருதம் கட்டாயமா? வைகோ வார்னிங்
தடுப்பூசி பலனளிக்குமா
இது குறித்து ரன்தீப் குலேரியா கூறுகையில், "தற்போது நம்மிடம் 70 முதல் 90% வரை பலன் தரும் தடுப்பூசிகள் உள்ளன. எனவே, தடுப்பூசிகளின் பலன் குறைந்தாலும் கூட கொரோனா பரவலைக் அது கட்டுப்படுத்தும். இந்த உருமாறிய கொரோனா வகைகள் வேகமாகப் பரவும் என்பதற்கோ தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படாது என்பதற்கோ எவ்வித ஆதாரமும் இல்லை. இருப்பினும், உருமாறிய கொரோனா குறித்து நாம் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்" என்றார்
இரண்டு விஷயங்கள்
அதேபோல மகாராஷ்டிரா மாநிலத்திலும் இரண்டு உருமாறிய கொரோனா பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், "இதில் உயிரிழப்புகளைக் குறைப்பது, தடுப்பாற்றல் என இரண்டு விஷயங்கள் உள்ளன. இந்தத் தடுப்பூசிகள் மோசமான கொரோனா பாதிப்பைக் குறைத்து, உயிரிழப்புகளைக் குறைக்கும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதேநேரம் இந்த புதிய வகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பாற்றல் குறையலாம். இருந்தாலும் அது பெரிய பிரச்சனையாக இருக்காது" என்றார்.
ஆய்வு தேவை
நாட்டில் தற்போது பரவும் புதிய கொரோனா வகைகள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதற்காகச் சிறப்புக் குழுக்கள் வைரஸ் பரவல் அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இதுவரை எந்த வகை கொரோனாவுக்கு எதிராகவும் தடுப்பூசி முற்றிலுமாக பலன் அளிக்காமல் போகவில்லை என்றும் அவர் கூறினார்.
தனியார் துறைக்கு அனுமதி
அடுத்தகட்டமாக 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்த உடல்நிலை பாதிப்பு உடையவர்களுக்கும் மார்ச் 1ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தனியார் துறையும் ஈடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை வரவேற்றுள்ள ரன்தீப் குலேரியா, இதன் மூலம் குறைந்த நாட்களில் அதிக பேருக்கு தடுப்பூசியைச் செலுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.