தமிழ்நாட்டுக்கு எதியூரப்பா ஆளுநராக வாய்ப்பே இல்லை.. இந்த இரண்டில் ஒன்றுக்கு சான்ஸ்!
டெல்லி: கர்நாடக முதல்வராக இருந்து வரும் எதியூரப்பா ஒரு வழியாக ராஜினாமா செய்யும் மனதுக்கு வந்து விட்டார். அவர் பதவி விலகிய பிறகு ஆளுநர் பதவி தரப்படும் என்று வலுவாக பேசப்படுகிறது.
ஆளுநர் பதவிக்கு எதியூரப்பா அமர்த்தப்படுவார் என்று அவரது நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக மேலிடமும் கூட, எதியூரப்பாவுக்கு கெளரவமான பொறுப்பு அளிக்கப்படும் என்று அவரிடமே உறுதியளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகத்தின் மிக மூத்த அரசியல்வாதியான எதியூரப்பா தீவிர அரசியலை விட்டு எப்படி விலகி இருக்கப் போகிறார் என்பதும் இன்னொரு பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.
அடங்காமல் அலை பாயும் எதியூரப்பா.. லோக்சபா தேர்தல் முடிந்ததும் லொள்ளு செய்ய தயாராகிறாராம்!
பாஜகவின் உயிர் நாடி
கர்நாடக பாஜகவைப் பொறுத்தவரை எதியூரப்பாவைப் பிரித்துப் பார்ப்பது என்பது ரத்தத்தையும்,உடலையும் பிரித்துப் பார்ப்பதற்கு சமம். அந்த அளவுக்கு கர்நாடக பாஜகவின் உயிர் நாடியாக திகழ்பவர் எதியூரப்பா. அந்த அளவுக்கு தனது உழைப்பைக் கொட்டி கட்சியை வலுவாக்கியவர். ஆரம்ப கால பாஜகவின் நிலை கர்நாடகம் நன்கறியும். அதை ஒரு மிகப் பெரிய சக்தியாக மாற்றியவர் நிச்சயம் எதியூரப்பாதான். சந்தேகமே தேவையில்லை.
சாமி சும்மா சொல்லலை
எதியூரப்பா இல்லாமல் கர்நாடக பாஜக இல்லை என்று சுப்பிரமணியம் சாமி சும்மா சொல்லவில்லை. எதியூரப்பாவின் உழைப்புதான் கர்நாடகாவில் இன்று பாஜக வலுவாக காலூன்றி இருக்க முக்கியக் காரணமே. கர்நாடகத்தின் முதல் பாஜக அரசுக்குத் தலைமை தாங்கிய எதியூரப்பா, இன்று வரை அசைக்க முடியாத முதல்வராக கோலோச்சி வருகிறார்.
ஆதிக்கம் தகருகிறது
கர்நாடக பாஜகவில் எதியூரப்பாவின் ஆதிக்கம் எப்போதும் போல வலுவாகவே இருக்கிறது என்று சொல்லி விட முடியாது. அதேசமயம், எதியூரப்பாவுக்கு எதிரான சக்திகள் ஒருங்கிணைந்து நிற்பதையும் மறுக்க முடியாது, மறைக்கவும் முடியாது. எதியூரப்பா விலக வேண்டிய தருணம் வந்து விட்டது. இன்று இல்லாவிட்டாலும் அவர் நாளை விலகித்தான் ஆக வேண்டும். அந்த அளவுக்கு ஒரு சூழல் உருவாகி விட்டது.
ஆளுநராகும் வாய்ப்பு
எதியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலகிய பின்னர் ஆளுநர் பதவி அவருக்குத் தரப்படும் என்று தெரிகிறது. அவர் தமிழ்நாட்டு ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று ரொம்ப நாட்களாக கூறப்படுகிறது. ஆனால் கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக காவிரிப் பிரச்சினை. மேகதாது அணை விவகாரம் சூடாகியுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு ஆளுநராக எதியூரப்பாவே பிரியப்படவில்லை என்று சொல்கிறார்கள்.
தமிழ்நாடு ஆளுநர் ஆவாரா
மேலும் தமிழ்நாட்டில் தற்போது இருப்பது திமுக ஆட்சி. மறைந்த தலைவர் கருணாநிதிக்கும், எதியூரப்பாவுக்கும் இடையிலான நட்பு அனைவரும் அறிந்ததுதான். கருணாநிதியும், எதியூரப்பாவும் இணைந்துதான் பெங்களூர் திருவள்ளுவர் சிலை விவகாரத்திற்கு சுமூக தீர்வு கண்டனர். நீண்ட காலமாக பெங்களூரில் பெரும் தலைவலியாக இருந்து வந்த இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு தமிழர்களின் அன்பைப் பெற்றவர் எதியூரப்பா.
கருணாநிதியுடனான நட்பு
இப்படிப்பட்ட நிலையில், கருணாநிதியின் மகன் ஆட்சி புரியும் இந்த வேளையில் இங்கு ஆளுநராக வர எதியூரப்பா விரும்பவில்லை என்று சொல்கிறார்கள். ஒரு ஆளுநர் என்பவர் மத்திய அரசின் கண் பார்வைப்படி செயல்பட வேண்டியவர். அப்படி இருக்கும்போது ஸ்டாலினுடன் பிணக்கு வரும் வகையில் தன்னால் செயல்பட முடியாது என்று எதியூரப்பா கருதுகிறாராம். எனவே தமிழ்நாட்டு ஆளுநராக அவர் வர வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள்.
தெலங்கானா
ஆந்திரா அல்லது தெலுங்கானாவின் ஆளுநராக எதியூரப்பா நியமிக்கப்படலாம் என்று வலுவாக நம்பப்படுகிறது. முதல்வர் பதவியிலிருந்து விலகிய பின்னர் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று தெரிகிறது. தற்போது தெலங்கானா ஆளுநராக இருப்பவர் தமிழிசை செளந்தரராஜன். ஒரு வேளை அவர் மாற்றப்பட்டால் அவருக்கு எந்த மாநிலத்தில் பதவி கொடுக்கப்படும் அல்லது அவர் மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்புவாரா என்று துணைக் கேள்விகளும் எழுகின்றன.
பொருத்திருந்து பார்ப்போம்.