தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் கிடைக்கும்.. ஆனால் நோயாளிகள் காத்திருக்க வேண்டுமா? டெல்லி நீதிமன்றம்
டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் சிலண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தொழிற்சாலைகளுக்கு வழங்கும் ஆக்சிஜனை உடனடியாக நிறுத்திவிட்டு, மருத்துவமனைகளுக்கு வழங்காதது ஏன் என்று டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு இரண்டு லட்சத்தைக் கடந்துள்ளது.
தாண்டவம் ஆடும் கொரோனா.. சென்னைக்கு அடுத்த இந்த மாவட்டம் மோசம்.. 80ஆயிரத்தை நெருங்கும் ஆக்டிவ்கேஸ்கள்
நாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவையும் உயர்ந்து வருகிறது.
கைகளில் ரத்த கறை
இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசை நீதிபதிகள் கடுமையாகச் சாடினர். இது குறித்து நீதிபதிகள் கூறுகையில், போதுமான அளவில் மருந்துகள் இருந்தும், சரியான நேரத்தில் தேவையான இடங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்று சேரவில்லை என்றால், உங்கள் கைகளில் ரத்தக் கறை படியும் என்பதை மறந்துவிடாதீர்கள் என்ற கடுமையான கருத்தை முன் வைத்தனர்.
நோயாளிகள் காத்திருக்க முடியாது
தொடர்ந்து மத்திய அரசின் நடவடிக்கைகளைச் சாடிய நீதிபதிகள், பெட்ரோலியம் மற்றும் இரும்பு தொழிற்சாலைகளுக்குச் செல்லும் ஆக்சிஜனை நிறுத்திவிட்டு, அவற்றை கொரோனா நோயாளிகளுக்கு அனுப்பாதது ஏன்? மக்களின் வாழ்க்கையைவிடப் பொருளாதார நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்க முடியாது. இது பேரழிவைத்தான் இட்டுச் செல்லும். இதை அனுமதிக்க முடியாது. தொழிற்சாலைகள் காத்திருக்கலாம். ஆனால் கொரோனா நோயாளிகள் காத்திருக்க முடியாது. மனித உயிர்கள் தற்போது ஆபத்தில் உள்ளது என்றார்.
ஒரு கோடி பேரை இழக்கலாம்
நாட்டில் தற்போதுள்ள கொரோனா பரவல் நிலை குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், 130 கோடி மக்கள்தொகையைக் கொண்ட இந்த நாட்டில் இரண்டு கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தகவல் கூறுகிறது. உண்மையான பாதிப்பு இதைவிட 5 மடங்கு இருந்தாலும், 10 கோடி பேருக்குத் தான் கொரோனா இருக்கும். நாம் மற்றவர்களைக் காப்பற்ற விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதே வேகத்தில் போனால், ஒரு கோடி பேரைக் கூட நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம். நாங்கள் ஒரு அரசை நடத்த இங்கு வரவில்லை, ஆனால் தற்போதுள்ள நிலைமையின் தீவிர தன்மையை நீங்கள் உணர வேண்டும் என்றார்.
ஆக்சிஜன் அளவு குறைப்பு
மேலும், கங்கா ராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நோயாளிகளுக்கு வழங்கும் ஆக்சிஜன் அளவை குறைத்திருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர்கள் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜனை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன்
இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த நீதிபதிகள், ஏன் இந்த தடையை இப்போதே அமல்படுத்தக் கூடாது. ஏப்ரல் 22ஆம் தேதி வரை எதற்காகக் காத்திருக்க வேண்டும். அதுவரை மக்களின் உயிர் ஆபத்தில் இருக்க வேண்டுமா? கொரோனா நோயாளிகளை ஏப்ரல் 22ஆம் தேதி வரை காத்திருக்கச் சொல்ல வேண்டுமா என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஐசியு படுக்கைகளில் உள்ள 3% கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் தேவைப்படும். ஐசியு படுக்கைகளில் உள்ள நோயாளிகளுக்கு 24 லிட்டர் ஆக்சிஜனும் சாதாரண படுக்கைகளில் உள்ள நோயாளிகளுக்கு 10 லிட்டர் ஆக்சிஜன் மட்டுமே தேவை என்றனர்.
டெல்லி vs மத்திய அரசு
முன்னதாக, மத்திய அரசு ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகத்தில் அரசியல் செய்வதாகவும் டெல்லிக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்குவதைத் தவிர்த்துவிட்டு, சில பெரிய மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்புவதாகக் குற்றஞ்சாட்டியது. இதற்குப் பதிலடி கொடுத்த மத்திய அரசு, டெல்லி அரசால் ஆக்சிஜனை ஒழுங்காக நிர்வகிக்க முடியவில்லை என்றால், டெல்லியின் சுகாதாரத் துறையை மத்திய அரசிடம் கொடுத்துவிட வேண்டும் என்றும் நாங்கள் சரியாக நிர்வகிப்போம் என்றும் பதிலடி கொடுத்தது.