தீபாவளி, பொங்கல்னு கூட்டமா கொண்டாட ஆரம்பிச்சீங்கன்னா.. கொரோனா நங்கூரம் போட்டு உட்கார்ந்துக்கும்!
டெல்லி: தீபாவளி, பொங்கல், குளிர்காலம் ஆகியவற்றின் போது கொரோனா விதிகளை முறையாக பின்பற்றாவிட்டால் ஒரே மாதத்தில் கொரோனா பாதிப்பு 26 லட்சம் அதிகரிக்கும் என அரசு அமைத்த குழு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
அக்டோபர் மாத இறுதி வாரத்தில் துர்கா பூஜை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை, டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ், ஜனவரி மாதம் ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, ஜல்லிக்கட்டு என வரிசையாக பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.
இந்த பண்டிகை காலங்களில் ஜவுளி வாங்குவது, பட்டாசு வாங்குவது, சுவாமி தரிசனம் செய்வது, திண்பண்டங்கள் வாங்குவது, நகைகள் வாங்குவது என மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முயலுவர்.
இந்திய மக்கள்தொகையில் 30 சதவீதம் பேர் கொரோனா பாதித்து மீண்டுள்ளனர்.. மருத்துவக் குழு
வட மாநிலங்கள்
அது போல் தமிழகம் உள்பட வடமாநிலங்களுக்கு இனி வரும் காலம் மழைக்காலமும் குளிர்காலமும் ஆகும். எனவே இந்த நேரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் என அரசு அமைத்த ஒரு குழு தெரிவித்துள்ளது. அதாவது நிதி ஆயோக் உறுப்பினர் விகே பால் அமைத்த 10 நபர் குழுதான் இதை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்த குழுவானது இத்தனை நாட்கள் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறித்த புள்ளிவிவரங்களை கொண்டு ஆய்வுகளை நடத்தியது. அதில் பண்டிகை காலங்கள், குளிர்காலம், மழைக்காலங்களில் கொரோனா வைரஸின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.
குளிர்காலம்
இந்தியாவில் இரண்டாவது அலையும் வீசத் தொடங்கும். குளிர்காலத்தில் நுரையீரல் தொடர்பான நோய்களால் பிரச்சினைகள் ஏற்படும். ஒரு வேளை பண்டிகை காலங்களிலும் குளிர்காலங்களிலும் கோவிட் 19 விதிகளை கடைப்பிடிக்காவிட்டால் நிச்சயம் ஒரே மாதத்தில் பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சம் அதிகரிக்கும்.
கொரோனா கட்டுக்குள் இருக்கும்
அடுத்த ஆண்டு கொரோனா கட்டுக்குள் இருக்கும் நிலையில் இது போல் பண்டிகை காலங்களில் மக்கள் விளைவுகளை அறியாமல் கூடுவதை தவிர்க்க வேண்டும். பெரும்பாலான மாநிலங்களில் கடந்த 3 தினங்களாக கொரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
3 முதல் 4 யூனியன் பிரதேசங்கள்
எனினும் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சண்டிகர், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களிலும் 3 முதல் 4 யூனியன் பிரதேசங்களிலும் நோயின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. மழைக்காலத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசும் என்பதை மறுப்பதற்கில்லை. இந்தியாவில் இரண்டாவது அலை வீச வேண்டுமா என்பது நம் கைகளில்தான் இருக்கிறது என அந்த குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.