ஜம்மு காஷ்மீர்: 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு.. ஒடுக்கப்பட்ட பயங்கரவாத கரங்கள்!
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீரில் போராட்டங்கள் நடைபெறாத வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. கடந்த ஓராண்டு காலத்தில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத கரங்கள் பெருமளவு ஒடுக்கப்பட்டிருக்கிறது.
நாடு விடுதலையின் போது சுதந்திர தேசமாக இருந்தது ஜம்மு காஷ்மீர். இதனை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சித்தது. இதனால் இந்தியாவுடன் இணைவதற்கு ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் ஒப்புக் கொண்டது.
அப்போது, ஜம்மு காஷ்மீருக்கு அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டன. ஜம்மு காஷ்மீருக்கு தனி கொடி, தனி அரசியல் சாசன, பிரதமர் பதவி என அவை இடம்பெற்றிருந்தன. காலப்போக்கில் 370-வது பிரிவின் பெரும்பாலான அம்சங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் நீக்கப்பட்டன.
இனவெறி முடிஞ்சு அடுத்து கொலை வெறி.. வாக்கிங் போன இந்திய பெண்ணை.. கொடூரமாக கொன்ற கும்பல்
அரசியல் சாசனம் 370வது பிரிவு ரத்து
ஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர் நிலம் வாங்க தடை என்பது உள்ளிட்ட சொற்ப அம்சங்கள் மட்டுமே 370-வது பிரிவில் இருந்தன. கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் 5-ந் தேதி இந்த 370-வது பிரிவையே முழுமையாக ரத்து செய்தது மத்திய அரசு. இதற்காக நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் மத்திய அரசு ஒப்புதலையும் பெற்றது.இதற்கு எதிராக ஜம்மு காஷ்மீரில் எந்த ஒரு போராட்டமும் நடைபெறாத வகையில் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர். மெகபூபா முப்தி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் இன்னமும் சிறையில் உள்ளனர். எஞ்சியவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
யூனியன் பிரதேசங்கள்
மேலும் கடந்த ஆண்டு 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட போதே ஜம்மு காஷ்மீர் என்கிற மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டன. இருப்பினும் மிக விரைவில் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்கிற உறுதிமொழியையும் மத்திய அரசு வழங்கியது. இதனிடையே கடந்த ஓராண்டு காலத்தில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்கள் பெருமளவு குறைந்திருக்கின்றன என்கின்றன பாதுகாப்பு வட்டாரங்கள்.
ஹிஸ்புல் முஜாஹிதீனுக்கு பின்னடைவு
இந்த ஓராண்டில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கம் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது. இதன் தளபதி ரியாஸ் நைகூ உள்ளிட்ட 55 பயங்கரவாதிகள் ஓராண்டு காலத்தில் கொல்லப்பட்டுள்ளனர். நைகூவின் மரணத்துக்குப் பின்னர் புதிய தளபதி கிடைக்காமல் அல்லாடி வருகிறது ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு. ஜம்மு காஷ்மீர் தனிநாடு கோருகிற பயங்கரவாத இயக்கங்களில் இளைஞர்கள் சேருவதும் ஓராண்டு காலத்தில் குறைந்துள்ளது. இந்த ஆண்டு மொத்தமே 67 இளைஞர்கள்தான் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளனர். கடந்த காலங்களை ஒப்பிடுகையில் இளைஞர்கள், பயங்கரவாத இயக்கங்களில் சேருவது 40% குறைந்திருக்கிறது என்பது பாதுகாப்பு படையினர் தகவல்.
தாக்குதல்கள் குறைவு
ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் இருந்து விலகி தனி ஆயுத குழுவாக செயல்பட்டது அன்சார் இயக்கம். இந்த தீவிரவாத இயக்கமும் வேரோடு நசுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினருடனான மோதலில் இந்த இயக்கத்தின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் இந்த அமைப்பே இல்லாமலேயே போய்விட்டது என்பதும் பாதுகாப்பு படையின் சாதனை. 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 15-ந் தேதிவரை ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 188 பயங்கரவாத தாக்குதல்கள், சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆனால் 370-வது பிரிவு நீக்கத்துக்குப் பின்னர் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை மொத்தம் 120 பயங்கரவாத சம்பவங்களே நிகழ்ந்துள்ளன. இது ஒப்பீட்டு அளவில் 40% குறைவு என்கிறது பாதுகாப்பு தரப்பு.
126 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர்
அதேநேரத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 126 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 133 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 51 கையெறி குண்டு சம்பவங்கள் நடைபெற்றன. இந்த ஆண்டு இதுவரை 21 கையெறி குண்டு சம்பவங்களே நிகழ்ந்திருக்கின்றன. கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை மொத்தம் 75 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தனர். இந்த ஆண்டு மொத்தம் 35 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்துள்ளனர். பயங்கரவாதிகளுடனான மோதல்கள், தாக்குதல்களில் கடந்த ஆண்டு 23 பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த ஆண்டு 22 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு 6 கண்ணிவெடி தாக்குதல்கள் நடைபெற்றது. நடப்பாண்டில் ஒரே ஒரு தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
ஆதரவாளர்கள் 300 பேர் கைது
பயங்கரவாதிகளின் 22 மறைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்து 190 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 22 பயங்கரவாதிகளும் அவர்களது 300 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டதாகவும் பாதுகாப்பு தரப்பு கூறுகிறது. இந்த நிலையில் இன்றுடன் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டு ஓராண்டு முடிவடைகிறது. இதனையொட்டி கறுப்பு நாளாக கடைபிடிக்கும் போராட்டங்கள் நடைபெறும் என சில அமைப்புகள் அறிவித்திருக்கின்றன. இதனால் ஜம்மு காஷ்மீரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.