ஜம்மு காஷ்மீர்: 370வது பிரிவு ரத்தாகும் போது 35ஏ-வும் தானாகவே காலாவதியாகிவிடும்!
Recommended Video
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட நிலையில் அதனுடன் இணைந்த அரசியல் சாசனத்தின் 35 ஏ பிரிவும் தாமாகவே காலாவதியாகிவிட்டது.
1949-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி அரசியல் சாசனத்தில் 370-வது பிரிவு சேர்க்கப்பட்டது. இப்பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அரசியல் சாசனம் அனுமதிக்கப்படுகிறது. மேலும் இந்திய நாடாளுமன்றத்தின் அதிகாரங்களும் கட்டுப்படுத்தப்பட்டது.
தற்போது 370வது பிரிவு என்கிற பிரதான அம்சத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அதனால் 35ஏ பிரிவும் காலாவதியாகிவிடும்.
இந்த 35ஏ பிரிவானது ஜம்மு காஷ்மீரில் பிற தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் குடியுரிமை பெற முடியாது. அம்மாநில அரசு பணிகளைப் பெறவும் முடியாது. பிற மாநிலத்தவர் சொத்துகளையும் அங்கு வாங்க முடியாது.
இதனால் முஸ்லிம்களின் தனிப்பெரும்பான்மை உள்ள மாநிலமாக ஜம்மு காஷ்மீர் இருந்து வந்தது. தற்போது சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டத்தையே ரத்து செய்துவிட்டதால் பிற மாநிலங்களைப் போல ஜம்மு காஷ்மீரும் இந்தியாவின் ஒரு அங்கமாகவே இருக்கும்.
அத்துடன் லடாக் மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்பதையும் மத்திய அரசு ஏற்றுள்ளது. சட்டசபை இல்லாத ஒரு தனி யூனியன் பிரதேசமாக லடாக் திகழும்.