டெல்லி மாஸ்டர்கள்.. கொள்ளைப் பணத்தில் அதிமுக குத்தகை.. வெளுத்து வாங்கிய நாஞ்சில் சம்பத்!
திருவள்ளூர் : ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரையும் கொம்பு சீவி கட்சியை உடைக்க பாஜக முயற்சித்து வருகிறது என நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுகவில் தற்போது நிலவி வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலுக்குப் பின்னணியில் பாஜக இருப்பதாக நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை முடக்கி அங்கே பாஜக அமர முயற்சிக்கிறது என்றும் எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் பாஜகவை வரவிட மாட்டோம் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
அய்யய்யோ..ஓபிஎஸ்-க்கா இப்படி ஒரு நிலைமை.. ஓபிஎஸ் எப்படி தாங்குவாரோ? நாஞ்சில் சம்பத் ரத்த கண்ணீர்!
திராவிட மாடல்
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதியில் திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், திமுக மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா ஆகியோர் கலந்துகொண்டார். திமுக இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர்கள் இருவரும் திராவிடம் பற்றியும், ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தனர்.
குறைந்த விலைக்கு குத்தகை
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத் அதிமுகவில் நிலவிவரும் மோதல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். நாஞ்சில் சம்பத் பேசுகையில், "அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம்கட்டுவதாக கருதி கொண்டிருக்கிறார்கள். டெல்லி எஜமானர்கள் அனுமதியோடு அதிமுகவை எடப்பாடி பழனிசாமி குறைந்த விலைக்கு குத்தகைக்கு எடுத்துள்ளார். பல்லாயிரம் கோடி கொள்ளையடித்த பணத்தில் பொதுக்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
உடைக்க முயற்சி
பா.ஜ.க மாநிலக் கட்சிகளை வாழ விட்டதாக வரலாறு இல்லை. இன்று மராட்டியத்தில் செய்கிற வேலையை நாளை தமிழகத்தில் அவர்கள் செய்வார்கள். செல்வாக்கு உள்ள கட்சியை உடைப்பதும், உருக்குலைப்பதும், ஊடுருவுவதும் பா.ஜ.கவின் கொள்கை. இதற்கு எடப்பாடி பழனிசாமி பலியாகியுள்ளார். ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் கொம்பு சீவி கட்சியை உடைக்க முயற்சி நடைபெற்று வருகிறது.
இரட்டை இலை சின்னத்தை முடக்கி
அழிந்து வரும் அதிமுகவை ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவராலும் காப்பாற்ற முடியாது. இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம். இரட்டை இலை சின்னத்தை முடக்கி அங்கே பாஜக அமர முயற்சிக்கிறது. ஆனால் எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் பாஜகவை வளர விட மாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.