சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை...நாட்டின் வளத்தை திருடும் செயல்...வாபஸ் பெறுக...ராகுல் காந்தி!!
டெல்லி:நாட்டின் வளத்தை திருடுவதற்காண முயற்சிதான் சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை. இதை நாட்டின் நலன் கருதி வாபஸ் பெற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வரைவு அறிக்கை 2020 பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த அறிக்கை மீது மக்கள் தங்கள் கருத்துகளை ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பதிவில், ''சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை உண்மையான நோக்கம் என்னவென்பது தெளிவாக தெரிகிறது. நாட்டை கொள்ளையடிப்பதற்கான திட்டம்தான் இது. நாட்டின் வளத்தை கொள்ளையடித்துக் கொண்டு இருக்கும் தனது தொழில் கூட்டாளிகளுக்கு மத்திய அரசு இதை செய்து கொடுக்கிறது. நாட்டை கொள்ளையடிப்பதையும், சுற்றுச் சூழலை அழிப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
கை மீறிப் போகும் தேனி.. கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மாநிலத்திலேயே 3வது இடம்.. ஷாக்!
மத்திய அரசின் இந்த செயல் இழிவானது, ஆபத்தானதும் கூட. பல ஆண்டுகளாக நடந்த போரில் நாம் நம்முடைய வளத்தை பாதுகாத்து வைத்துள்ளோம். மத்திய அரசின் இந்த முடிவு இந்தியா முழுவதும் பரவலாக அழிவை ஏற்படுத்தும்.
இனிமேல், நிலக்கரிச்சுரங்கம், சுரங்கப்பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை. இது நமது சுற்றுச்சூழலை பாதிக்கும். நெடுஞ்சாலை, ரயில்வே இருப்புப்பாதைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லும். இதனால், ஆயிரக்கணக்கான மரங்கள்அழிக்கப்படும். உயிரினங்கள் வாழ்விடங்களை இழக்கும். சுற்றுச்சூழல் வரைவு அறிக்கைக்கு பின் பயங்கரமான உண்மை மறைந்து இருக்கிறது. ஒரு திட்டத்தால் சுற்றுச்சூழலை அழித்த பின்னர், சுற்றுச்சூழல் வரைவு மதிப்பீடு செய்ய முடியும் என்பதுதான் அந்த உண்மை.
ஆதலால், ஒவ்வொரு இந்தியரும் சுற்றுச்சூழல் வரைவு அறிக்கைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அரசியலைக் கடந்து இதை எதிர்க்க அனைவரும் முன் வரவேண்டும். இந்த திட்டம் நமது எதிர்கால சந்ததிகளுக்கும் பேரழிவுகளை ஏற்படுத்தும்'' என்று தெரிவித்துள்ளார்.