சேர்ந்த 10 நாளில் முத்தலாக் புகழ் ஷயரா பானுவுக்கு பாஜக அளித்த நவராத்திரி பரிசு
டெல்லி: பாஜகவில் இணைந்த 10 நாளில் முத்தலாக் புகழ் ஷயரா பானுவுக்கு இணை அமைச்சர் அந்தஸ்திலான பதவி வழங்கப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது,
உத்தரகாண்டை சேர்ந்த ஷயரா பானு. இவர் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பிறகே மத்திய அரசு முத்தலாக்கிற்கு எதிராக சட்டம் கொண்டு வந்தது.
முஸ்லிம்களின் தனி சட்டமான முத்தலாக் வழக்கத்துக்கு எதிராக வழக்கு தொடுத்ததால் ஷயரா பானு இந்திய அளவில் பெரும் கவனத்தை பெற்றார். இவர் உத்தரகாண்ட் மாநில பாஜ தலைவர் பன்சிதார் பகத் முன்னிலையில் கடந்த 12ம் தேதி பாஜகவில் இணைந்தார். அவர் பாஜகவில் சேர்ந்து 10 நாட்களே ஆகியுள்ள நிலையில், நேற்று அவருக்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் இணை அமைச்சர் அந்தஸ்திலான பதவி அளிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் தர்ஷன் சிங் ராவத் கூறும்போது, ஷயரா பானு வுக்கு மாநில பெண்கள் ஆணையத்தின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இது இணை அமைச்சர் பதவிக்கு இணையான பதவியாகும்,
ஜோதி ஷா, புஷ்பா பஸ்வான் ஆகியோரும் மாநில பெண்கள் ஆணையத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேர் நியமனம் மூலம் பெண்கள் ஆணையத்தில் நீண்ட காலமாக காலியாக இருந்த 3 பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கிறது. இது முதல்வர் அவர்களுக்கு அளித்த நவராத்திரி பண்டிகை கிப்ட்,'' இவ்வாறு கூறினார்.