வானமே எல்லை!.. விடாமுயற்சியால் முளைத்த "சிறகுகள்".. யார் இந்த சிங்கப்பெண் லட்சுமி ஜோஷி?
டெல்லி: கொரோனா பெருந்தொற்று சமயத்தில் சீனாவில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் வந்தே பாரத் திட்டத்தின் பெண் விமானிக்கு "சிறகு" முளைத்து பறந்தது எப்படி என்பது குறித்து தெரியுமா?
சிறிய வயதில் வானத்தில் பறக்கும் விமானம் நம் வீட்டை தாண்டி பறக்கும் போது நமக்குள் ஏற்படும் சந்தோஷமே வேறு லெவலில் இருக்கும். அப்போது நாமும் ஒரு நாள் இதே போல் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
ஆனால் வெகு சிலருக்கு மட்டுமே அந்த விமானத்தை நாம் இயக்க வேண்டும் என்ற கனவு ஏற்படும். அவ்வாறு 8 வயது முதலே கனவு கண்டவர்தான் லட்சுமி ஜோஷி. யார் இவர் என்பதை பார்ப்போம்!
திருப்பூர் அருகே.. மாணவர்கள் ஜாதி பெயரை சொல்லி கழிவறையை சுத்தம் செய்ய சொன்ன ஆசிரியை! அதிரடி கைது
கொரோனா தொற்று
2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்ட போது வெளிநாடுகளுக்கான விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக சீனாவிலிருந்தும் சீனாவுக்கும் விமான போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. அங்கிருந்து வந்த தொற்றால் பணி நிமித்தமாகவும் கல்விக்காகவும் சென்ற ஏராளமான இந்தியர்கள் அங்கு சிக்கிக் கொண்டனர்.
பெண் விமானி
இதனால் அவர்களை மீட்க அந்தந்த நாடுகள் தங்கள் நாட்டு விமானங்களை அனுப்பி அவர்களை மீட்டன. அந்த வகையில் இந்தியாவும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்கள் பலர் மீட்கப்பட்டனர். அவ்வாறு 2020 ஆம் ஆண்டு சீனாவில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியர்களை மீட்கும் விமானத்தின் பெண் விமானியாக செயல்பட்டவர் லட்சுமி ஜோஷி.
வானமே எல்லை
இவர் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இவர் கூறுகையில் நான் 8 வயதாக இருக்கும் போது முதல் முறையாக விமானத்தில் அமர்ந்த போதே நான் விமானியாக வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். அதற்காக கடுமையாக உழைத்தேன். எனது கனவு நனவாகிவிட்டது. சிறிய வயதில் நான் விமானியாக வேண்டும் என்ற கனவை என் தந்தையிடம் சொன்ன போது வானமே எல்லை என்றார். நான் பைலட் ஆவதற்காக கடன் பெற்றார்.
சீனாவின் ஹாட்ஸ்பாட்
விமானியாக எனது முதல் பயணமே சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்பதுதான். சீனாவில் கொரோனா ஹாட்ஸ்பாட்களில் ஒன்று ஷாங்காய் ஆகும். அந்த பயணத்தை நான் மறக்கவே மாட்டேன். விமானத்தில் இருந்த குழுவினரான நாங்கள் அனைவரும் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டோம். அப்போது விமானத்தில் ஏறிய ஒரு சிறுமி என்னிடம் நானும் உங்களை போல் விமானியாவேன் என்றாள். அதற்கு நான் எனது அப்பா என்னிடம் சொன்னது போல் வானமே எல்லை என்றேன். 3 மாத விமானி பயிற்சிக்குப் பிறகு எனது விமானி உரிமம் கொடுத்தவுடன் நான் மகிழ்ந்தேன். எனது அப்பா என்னை பார்த்து பெருமிதம் கொண்டார். "வானமே எல்லை என்றேன், நீ அதையும் தாண்டிவிட்டாய்" என எனது தந்தை என்னிடம் சொன்னார் என்கிறார் இந்த சிங்கப் பெண் லட்சுமி ஜோஷி!