பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரமாக மாறும் டெல்லி - தொடரும் கொலைகள்
கத்திக்குத்து, கொலை, பாலியல் பலாத்காரம் ஆகிய தொடர் சம்பவங்களால் டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக மாறி வருகிறது. கள்ளத்தொடர்பில் இருந்த பெண் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சடலம் கண்டுபிடிக்கப்பட்ட
டெல்லி: தென்கிழக்கு டெல்லியில் இளம் பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். பெண்ணை கத்தியால் குத்திய நபரை அடித்து துவம்சம் செய்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். படுகாயங்களுடன் அந்த நபர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இளம்பெண்ணை கொன்றது ஏன் என்றும் காதல் தகராறில் நடந்த கொலையா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். ரகசிய காதலியை இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகும் முன்பாக தென்கிழக்கு டெல்லியில் இளம் பெண் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பெண்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு டெல்லியின் போகால் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு ஏழுமணியளவில் அந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார் அந்தப்பெண். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர் அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் பேசிக்கொண்டிருந்த போதே கத்தியால் குத்தி ரத்த வெள்ளத்தில் சாய்த்தார்.
அப்போது பேருந்து நிலையத்தில் காத்திருந்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். தப்பித்து ஓட நினைத்த அந்த நபரை அங்கிருந்தவர்கள் அடித்து துவம்சம் செய்தனர். கத்திக்குத்திற்கு ஆளான பெண்ணையும், அடிவாங்கிய நபரையும் போலீசார் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கத்திக்குத்தில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அந்தப்பெண்ணின் சகோதரர் போலீசில் அளித்த புகாரில் தனது தங்கையை கொன்றது ஏன் என்று தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். காதல் தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் பல பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாகவே உள்ளது.
பெண்கள் ஆபத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள ரயில்களில் கத்தியை எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பெப்பர் ஸ்ப்ரே உள்ளிட்டவற்றை வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 8 வருடங்களில் பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. நிர்பயா பலாத்காரம் சம்பவம் போல பல பெண்கள் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தனியாக இருக்கும் பெண்களும், மூத்த குடிமக்களும் கூட கொலை செய்யப்படுகின்றனர். காவல்துறை மீது முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். காவல்துறையினர் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மெத்தனம் காட்டுவதாகவும் ட்விட்டரில் புகார் கூறியிருந்தார். இந்த நிலையில் தொடர் கொலைகளும், பலாத்கார சம்பவங்களும் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.