பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு
டெல்லி: வடக்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண் ஒருவர் பூட்டிய வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்தப்பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.
நரேலா பகுதியில் உள்ள அந்த அபார்ட்மெண்ட்டில் ஒரு அறையில் அந்த பெண் ஒரு நபருடன் வாடகைக்கு வசித்து வருகிறார். நேற்று இரவு அந்த அபார்ட்மெண்ட் அறை வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கடந்த இரண்டு மாதமாக வாடகைக்கு வசித்து வரும் அவர்களிடம் வீட்டு வாடகை வாங்குவதற்காக அபார்ட்மெண்ட் ஓனர் வந்த போது வீடு பூட்டப்பட்டிருந்தது கண்டு தட்டிப்பார்த்தார். மூன்று நாட்களாக அறை பூட்டப்பட்டிருக்கிறதே என்ற சந்தேகத்தில் ஜன்னலை திறந்து பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார்.
மயக்கமான நிலையில் ரத்த வெள்ளத்தில் அந்த பெண் கிடந்தால் பலமான பொருளினால் அவரது தலையிலும் உடலிலும் காயம் ஏற்பட்டிருந்தது. உயிர் கொஞ்சமே கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்தது. போலீசிற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பூட்டை உடைத்து பெண்ணை மீட்டனர்.
உடனடியாக சத்யவதி ராஜா ஹரீஸ் சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்த பெண் கடந்த 12 மணிநேரமாக மயக்க நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார் என்று மருத்துவர்கள் கூறினர். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
அந்த பெண்ணுடன் கடந்த இரண்டு மாத காலமாக தங்கியிருந்த அந்த நபரை காணவில்லை. மயக்கநிலையில் இருக்கும் அந்தப்பெண் கண் விழித்து பேசினால் மட்டுமே நடந்த சம்பவத்திற்கான காரணம் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
டெல்லியில் தினசரியும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நாள்தோறும் பாலியல் பலாத்காரம் அதிகரித்து வருகிறது. கொலை கொள்ளை சம்பவங்களும் அதிகரிப்பதாக அம்மாநில முதல்வரே கவலை தெரிவித்திருந்தார். காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குற்றச்சம்பவங்கள் குறையும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.