டெல்லியில் ஷாகீன்பாக் 2.0 ஆரம்பம்.. ஜாப்ராபாத் பகுதியில் சிஏஏவுக்கு எதிராக மாஸாக குவிந்த பெண்கள்!
டெல்லி: டெல்லியில் ஷாகீன்பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஜாப்ராபாத் பகுதியில் சிஏஏவுக்கு எதிராக பெண்கள் குவிந்தததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த குறிப்பிட்ட 5 மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த மசோதா குடியுரிமை திருத்தச் சட்டமாக கடந்த ஆண்டு இரு அவைகளிலும் நிறைவேறியது.
தீர்மானம்
இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. வடஇந்தியாவில் இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கம், புதுவை, கேரளம் ஆகிய இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அந்தந்த மாநில முதல்வர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர்.
வெயில்
இந்த நிலையில் டெல்லியில் ஷாகீன்பாக், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் போராட்டம் தீவிரமடைந்தது. ஷாகீன்பாக்கில் கடந்த 2 மாதங்களாக பெண்களும், குழந்தைகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் வெயில், மழையை பொருட்படுத்தாமல் இந்த போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டக் களத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியும் போராட்டம் கைவிடப்படவில்லை.
|
இஸ்லாமிய அமைப்பு
இந்த நிலையில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் சிஏஏவை நிறைவேற்ற மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றக் கோரி வண்ணாரப்பேட்டை மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. இதை கலைக்க போலீஸார் தடியடி நடத்தியவுடன் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. தமிழக சட்டசபை நோக்கி இஸ்லாமிய அமைப்பினர் பேரணி சென்றனர்.
|
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இந்த நிலையில் டெல்லியில் மேலும் ஒரு இடத்தில் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் தொடங்கியது. ஜாப்ராபாத் மெட்ரோ ரயில் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து பெண்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஷாகீன்பாக்கில் ஏற்கெனவே போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஜாப்ராபாத், ஷாகீன்பாத் 2.0வாகி வருகிறது. மெட்ரோ பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.