ஆட்சி மாற்றம் எதிரொலி- ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகார் மீது இனி தமிழகத்தில் விசாரணைக்கு வாய்ப்பு?
டெல்லி: தமிழக ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகாரை ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலேயே விசாரிக்கலாம் என புகார் தந்த பெண் எஸ்.பி. உச்சநீதிமன்றத்தில் புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
தமிழக லஞ்ச ஒழிப்புதுறை ஐஜியாக இருந்த முருகன் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எஸ்.பி ஒருவர் கடந்த 2018-ம் ஆண்டு புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரித்த விசாகா கமிட்டி, இந்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்குப் பரிந்துரை செய்தது.
அன்று நுங்கம்பாக்கத்தில் ஸ்வாதி.. இன்று தாம்பரத்தில் ஸ்வேதா.. கழுத்தறுத்து கொலை.. சென்னையில் ஷாக்!
தெலுங்கானாவில் விசாரணை
ஆனால் சிபிசிஐடி முறையாக விசாரணை நடத்தவில்லை என கூறியும், வழக்கு விசாரணையை வேறு மாதிலத்துக்கு மாற்றக்கோரியும் புகாரளித்த பெண். எஸ்.பி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஐ.ஜி. முருகனுக்கு எதிரான பாலியல் புகார் வழக்கின் விசாரணை மற்றும் அது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறை பதிவு செய்துள்ள வழக்குகளை தெலுங்கானா மாநில காவல்துறையை விசாரிக்க உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றம் தடை
மேலும் இந்த வழக்கை தெலுங்கான டி.ஜி.பி மேற்பார்வையிட வேண்டும்; இந்த புகார் மீதான விசாரணையை 6 மாதத்துக்குள் விசாரித்து முடித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதை எதிர்த்து ஐ.ஜி. முருகன் மற்றும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த உச்சநீதிமன்றம், தெலுங்கானா மாநிலத்தில் இந்த விவகாரத்தை மாற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
ஆட்சி மாற்றத்தால் தமிழகத்திலேயே விசாரணை
இந்த நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது; ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார் வழக்கு விவகாரத்தை தமிழகத்தில் விசாரிக்கலாம். தற்போது தமிழ்நாட்டில் இந்த வழக்கு விசாரிக்கும்போது தனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புவதாக புகார் அளித்த பெண் எஸ்.பி பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பதாக சுட்டிக்காட்டினார். மேலும், இந்த விவகாரத்தில் மனுதாரர்களின் கோரிக்கையான தமிழகத்திலேயே விசாரணை நடத்த வேண்டும் என்பதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லாததால் மனுக்கள் அத்தனையையும் முடித்து வைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.
விசாரணை ஒத்திவைப்பு
ஐ.ஜி முருகன் தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி ஆஜராகி தனது வாதத்தை எடுத்து வைக்க முற்பட்டபோது சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவரின் குரல் கேட்கவில்லை, இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து மனுக்களையும் வரும் திங்கட்கிழமை ஒன்றாக பட்டியலிட்டு விசாரித்து அன்றைய தினம் முடிவு அறிவிக்கப்படும் என கூறி வழக்கு மீதான விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.