மலைகள் போல் நின்ற சிங்கப் பெண்கள்.. தைரியம், தன்னம்பிக்கையுடன் கடுங்குளிருக்கும் அசராது போராட்டம்
டெல்லி: டெல்லியில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் அரண் போல் நின்று குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் தைரியத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.
டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் வலுத்து வருகிறது.
கழுத்தை பிடித்து நெரித்தார்கள்.. கீழே விழுந்தேன்.. உ.பி சம்பவம் பற்றி பிரியங்கா காந்தி ஷாக் விளக்கம்
கடும் பாதிப்பு
தற்போது டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி 2.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாக இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் கடுங்குளிர் நிலவியதை அடுத்து டெல்லியில் கலிண்டி குஞ்ச் சாலையில் போராட்டம் நடத்தியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தார்பாய்
குளிர் தாளாமல் பலர் அங்கிருந்து வெளியேறினர். இதையடுத்து போராட்டக்காரர்களை சுற்றி படுக்கும் மெத்தைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. அதை சுற்றி தார் பாய் பந்தல் போடப்பட்டிருந்தது.
எதிர்காலம்
குளிரால் ஆண்கள் அவதிப்படுவதை அடுத்து போராட்டத்தை விடக் கூடாது என்ற மனதைரியத்துடன் 100 சதுர மீட்டர் வரை பெண்கள் முன் வரிசையில் அமர்ந்து கொண்டனர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் வீதியில் போராடிய பெண்களில் சிலர் கூறுகையில் நான் என் மகளின் எதிர்காலத்துக்காக போராடி வருகிறேன்.
என்ன சொல்வது
சுதந்திரத்துக்காக நமது முன்னோர்கள் எப்படி போராடினார்களோ அது போல் நாங்களும் போராடி வருகிறோம். எனது 4 வயது மகளை தடுப்பு முகாமில் வளர்க்க விரும்பவில்லை. எனக்கு 22 வயதாகிறது. என் வயதை என் மகள் அடையும் போது நான் அவளிடம் என்ன சொல்வது? என கேட்டார் டிசம்பர் 16-ஆம் தேதி முதல் போராடும் ரெஹானா காட்டன்.
ஆரம்பத்திலிருந்து
கடுங்குளிர் குறித்து கேட்டபோது மத்திய அரசு எங்களுக்கு இழைக்கும் தொல்லையை விட குளிர் தொல்லை எல்லாம் ஒன்றும் இல்லை என்றார். இந்த போராட்டத்தில் பெரும்பாலானோர் காலையில் சென்றுவிட்டு மாலையில் வருவர். ஆனால் பெண்கள் எங்கும் அசராமல் ஆரம்பத்திலிருந்து போராடி வருகின்றனர்.
மெத்தைகள்
இதுகுறித்து இன்னொருவர் கூறுகையில் நாங்கள் வீட்டுக்கே போவதில்லை. இயற்கை உபாதைகளை கழிக்க அருகில் உள்ள வீடுகளை பயன்படுத்திக் கொள்கிறோம். அவர்கள்தான் எங்களுக்கு படுக்கை விரிப்புகள், மெத்தைகள், உணவு, மருந்து உள்ளிட்டவற்றை வழங்குகின்றனர்.
பாடம்
இந்த குளிர்நிலை இன்னும் போக போக எப்படி மோசமாகும் என தெரியவில்லை. எனினும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்றார். ஆண்களை சுற்றி பெண்கள் அமர்ந்து கொண்டு அரண் போல் மனதைரியத்துடன் போராட்டத்தை முன் நடத்திய விதம் பெண்களை சாதாரணமாக நினைப்போருக்கு ஒரு பாடமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.