ஸ்டெர்லைட்டை திறக்க ஒருபோதும் அனுமதி கிடையாது.. தமிழக அரசு ஒரே போடு.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: பராமரிப்பு பணி உள்ளிட்ட எந்த பணிகளுக்காகவும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடும் எதிர்ப்பிற்கு இடையில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே 28-ம் தேதி தமிழக அரசால் மூடப்பட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், வழக்கு தொடுத்தது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது. இதில் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடுமையான வாதங்களை வைத்தது.
கோரிக்கை
இன்று நடந்த விசாரணையில் பராமரிப்பு பணிக்காக ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிறுவனம் கோரிக்கை வைத்தது. ஸ்டெர்லைட் ஆலை பல மாதங்களாக திறக்கப்படவில்லை. இதனால் நிறைய பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும், அதனால் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
கொள்கை முடிவு
இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது. இந்த ஆலை காற்று மாசை ஏற்படுத்துகிறது. சுற்றுசூழலுக்கு இந்த ஆலை கேடு விளைவிக்கிறது. அதனால் இதை இயங்க அனுமதிக்க முடியாது.
முடியாது
இதில் தமிழக அரசின் கொள்கை முடிவு. இதற்கு முன் தமிழக அரசு வைத்த பதில் மனு மற்றும் கோரிக்கைகளில் இதை தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறோம். இதனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கவே முடியாது என்று தமிழக அரசு கூறியுள்ளது.
உத்தரவு
தமிழக அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது. பராமரிப்பு பணிக்காகவும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.