"எந்தவிதமான அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன்".. காந்தியை மேற்காள் காட்டி ராகுல் காந்தி 'நச்' ட்வீட்
டெல்லி: உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ்க்கு சென்ற போது போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி, மகாத்மா காந்தியை மேற்கோள் காட்டி, "எந்தவிதமான அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 20 வயது பெண்ணின் குடும்பத்தை சந்திக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது தங்கை பிரியங்கா காந்தி ஆகியோர் சென்றனர். அப்போது ராகுல் காந்தியை காரில் போகவிடமால் தடுத்தனர். இதனால் இருவரும் நடந்து சென்றனர்.
அப்போது போலீசார் மேற்கொண்டு போக அனுமதிக்க முடியாது என்று கூறி ராகுல் காந்தி தடுத்துதள்விட்டதாக கூறப்படுகிறது. இதில் ராகுல் காந்தி கீழே விழுந்தார். பின்னர் அவரை தூக்கிய போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து சென்று, டெல்லிக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.
ராகுல் காந்தியை பிடித்து கீழே தரையில் தள்ளி உ.பி. போலீஸ் உச்சகட்ட அராஜகம்-காங். தொண்டர்கள் மறியல்!
கூட்டம் கூடியதற்காக வழக்கு
அத்துடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மீது தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இருவரும் தடையை மீறி கூட்டம் கூடுதல், சமூக இடைவெளியை பின்பற்றாதது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது.
போலீசுக்கு கண்டனம்
ராகுல் காந்தி நடந்த அத்துமீறலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். என்சிபி தலைவர் சரத் பவார் வெளியிட்ட ட்வீட் பதிவில்,. "காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது உ.பி. போலீஸின் பொறுப்பற்ற நடத்தை மிகவும் கண்டிக்கத்தக்கது. சட்டத்தை நிலைநிறுத்த வேண்டியவர்கள் ஜனநாயக விழுமியங்களை இப்படி காலில் போட்டு மிதிப்பது கண்டிக்கத்தக்கது" என்று கூறியுள்ளார்.
அதிகார துஷ்பிரயோகம்
ஆர்.ஜே.டி தலைவர் தேஜாஷ்வி யாதவ் தனது ட்வீட் பதிவில் "ஒடுக்குமுறை ஆட்சியின் ஒவ்வொரு கண்மூடித்தனமான அதிகார துஷ்பிரயோகத்திற்கும் எதிர்ப்பு தெரிவிப்பது எதிர்க்கட்சிகளின் கடமை மற்றும் ஜனநாயக உரிமை! மக்களின் குரலையும் விருப்பத்தையும் அமைதிப்படுத்தவோ அடக்கவோ முடியாது! ராகுல் கைது செய்யப்பட்டதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறியிருந்தார்.
ராகுல் காந்தி போட்ட ட்வீட்
இந்நிலையில் சம்பவம் நடந்த ஒரு நாளைக்கு பின்னர் காந்தியின் 151வது பிறந்த நாளான இன்று ராகுல் காந்தி வெளியிட்ட ட்வீட் பதிவில், "இந்த உலகில் எவருக்கும் நான் பயப்பட மாட்டேன். எந்தவிதமான அநீதிக்கும் நான் தலைவணங்க மாட்டேன். சத்தியத்தின் சக்தியுடன் பொய்களை நான் தோற்கடிப்பேன், பொய்யை எதிர்த்துப் போராடுவேன், அதை தடுக்க நினைக்கும் அனைத்து சக்திகளுக்க எதிராகவும் போராடுவேன்... மனமார்ந்த வாழ்த்துக்கள் காந்தி ஜெயந்தி, " என இன்று காலை இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.