கோரிக்கையை நிறைவேற்றாத வரை... அரசை நிம்மதியாக இருக்க விடமாட்டோம்.. ராகேஷ் டிக்கைட் பேச்சு
டெல்லி: விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாத வரை அரசை நிம்மதியாக இருக்க விடப்போவதவில்லை என்று விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் போராடும் விவசாயிகள் தற்போது மாக பஞ்சாயத்து என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இதில் கலந்து கொள்ளும் முக்கிய விவசாய தலைவர்கள் மத்திய அரசின் புதிய சட்டங்கள் குறித்து மக்களிடையே விளக்கி வருகின்றனர்.
அரசை விட மாட்டோம்
இந்நிலையில், இன்று நடைபெற்ற மகா பஞ்சாயத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட், "அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்காத வரை, எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத வரை, மத்திய அரசை நிம்மதியாக இருக்க விடமாட்டோம். நாடு முழுவதும் சென்று இச்சட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கி, எங்கள் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவைப் பெறுவோம்" என்றார்.
பொது விநியோக முறை
மேலும், இந்த விவசாய சட்டங்கள் நாடு முழுவதும் உள்ள பொது விநியோக முறையை முற்றிலுமாக அழித்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சட்டங்களை விவசாயிகள் மட்டும் பாதிக்காது என்று குறிப்பிட்ட அவர், விவசாய துறையைச் சார்ந்துள்ள சிறு வணிகர்கள், தினசரி தொழிலாளர்கள் உள்ளிட்ட மற்ற பிரிவினரும் இந்தச் சட்டத்தால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் பேசினார்.
பெரு நிறுவனங்கள்
தொடர்ந்து பேசிய ராகேஷ் டிக்கைட், "நம் நாட்டில் குடோன்கள் தான் முதலில் கட்டப்பட்டன. அதன் பின்னரே இந்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த சட்டங்கள் பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பது விவசாயிகளுக்குத் தெரியாதா? நம் நாட்டில் பொதுமக்களின் பசியின் மீது யாரும் வணிகம் செய்யக்கூடாது, அதை நாம் ஒருபோதும் அனுமதிக்கப்படாது" என்றும் அவர் கடுமையாகச் சாடினார்,
தியாகம் வீண் போகாது
அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து விவசாயச் சங்கங்கள் ஒன்றாக இணைந்து முடிவு செய்யும் என்றும் அந்த முடிவுக்கு நாடு முழுதும் உள்ள விவசாயிகள் கட்டுப்படுவார்கள் என்றும் ராகேஷ் டிக்கைட் தெரிவித்தார். அதேபோல இந்தக் கூட்டத்தில் பேசிய பல்பீர் சிங் ராஜேவா, இந்தப் போராட்டத்தில் பல விவசாயிகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது என்றும் கூறினார்.