அவர்கள் குறைக்கும்வரை, நாங்கள் குறைக்க மாட்டோம்- சீன எல்லையில் வீரர்கள் குவிப்பு..ராஜ்நாத்சிங் பதில்
டெல்லி: எல்லையில் சீனா தனது வீரர்களைக் குறைக்க முன்வராத வரை, இந்தியா தனது வீரர்களைக் குறைக்காது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலுக்குப் பின் நிலைமை மேலும் மோசமடைந்தது.
அதன் பின்னர், இரு தரப்பும் எல்லையில் தொடர்ந்து வீரர்களைக் குவித்து வருகின்றன. எல்லையில் குவிக்கப்படும் வீரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பதற்றம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தியா வீரர்களைக் குறைக்காது
இந்நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டைம்ஸ் நவ் செய்தி நிறுவனத்திற்குச் சமீபத்தில் பேட்டியளித்திருந்தார், அதில் அவர், "எல்லையில் இருக்கும் வீரர்களைக் குறைக்க முதலில் சீனா முன்வர வேண்டும். அவர்கள் முன்வராத வரை இந்தியா தனது வீரர்களை குறைக்காது. இரு தரப்பிற்கும் இடையே நிலவும் பதற்றம் எப்போது முடிவுக்கு வரும் என்று ஒரு தேதியை நம்மால் குறிப்பிட முடியாது. ஆனால், பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்பதில் நம்பிக்கையாக உள்ளோம்" என்றார்.
இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது
அருணாச்சல பிரதேச எல்லையில் அமைந்துள்ள கிராமத்தில் சீனா ஒரு புதிய கிராமத்தைக் கட்டியுள்ளதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியானது. அது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ராஜ்நாத்சிங்,"எல்லை பகுதியில் இதுபோன்ற கட்டுமானங்கள் பல ஆண்டுகளாகக் கட்டப்படுகிறது. எல்லைப் பகுதிகளிலுள்ள மக்களுக்காகவும் நமது பாதுகாப்பு படையினருக்காகவும் இந்தியாவும் தற்போது எல்லைகளில் கட்டுமான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது" என்றார்.
இந்தியா-சீனா பேச்சுவார்த்தை
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடைசியாக எப்போது பேச்சுவார்த்தை நடைபெற்றது என்று கேட்ட கேள்விக்குப் பதிலளித்த ராஜ்நாத்சிங், "ஜனவரி 19ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை குறித்து கடைசி நிமிடத்தில்தான் சீனா எங்களிடம் தெரிவித்தது. இதனால் ஜனவரி 24ஆம் தேதிக்கு இந்த பேச்சுவார்த்தையைத் தள்ளிவைக்கக் கேட்டுள்ளோம்" என்றார்.
விவசாய சட்டம்
விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து ராஜ்நாத் சிங் கூறுகையில், "விவசாய சட்டத்திலுள்ள ஒவ்வொரு சட்டப்பிரிவு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராகவே உள்ளது. தேவைப்பட்டால் திருத்தங்களையும் செய்வோம். இருப்பினும், விவசாயிகளுக்காக அடுத்த 18 மாதங்கள் இச்சட்டங்களை நிறுத்தி வைக்கவும் மத்திய அரசு தயாராகவுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் உறுதியளித்துள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் பேச்சுவார்த்தை மூலம் நாம் தேவையான முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம்" என்றார்.