தமிழக சுகாதார பணிகள் சீர்திருத்த திட்டத்திற்கு உலக வங்கி ரூ.2,000 கோடி கடன்.. கையெழுத்தான ஒப்பந்தம்
டெல்லி: தமிழகத்தில் சுகாதார திட்டங்களை செயல்படுத்த உலக வங்கி ரூ.2,009 கோடியை கடனாக வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக உலக வங்கி - மத்திய அரசு - தமிழக அரசு ஆகியவற்றிற்கு இடையே, டெல்லியில் முத்தரப்பு ஒப்புந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சர்வதேச அளவில் சுகாதார முன்னேற்ற நாடுகளின் நிதி ஆயோக் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. பிரசவ காலக்கட்டங்களின் போது தாய் இறப்பு விகிதம், ஒரு லட்சத்துக்கு 90 பேர் என்பதில் இருந்து, ஒரு லட்சத்துக்கு 62 பேர் என்ற அளவாக குறைந்துள்ளது. மேலும் பிரசவத்தின்போது பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம், ஆயிரம் பேருக்கு 30 என்பதில் இருந்து ஆயிரம் பேருக்கு 20 ஆகவும் குறைந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ள சுகாதார திட்டங்களுக்கு, உலக வங்கி நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது. இது தொடர்பான முத்தரப்பு ஒப்பந்தத்தில், மத்திய அரசு சார்பாக பொருளாதார விவகாரத்துறை கூடுதல் செயலாளர் சமீர் குமார் காரே, தமிழக அரசு சார்பாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், உலக வங்கி சார்பாக அதன் இந்திய இடைக்கால இயக்குனர் ஹிஷாம் அப்டோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.
உலக வங்கி வழங்கும் இந்த நிதியை பயன்படுத்தி தமிழ்நாடு சுகாதார பணிகள் சீர்திருத்த திட்டம் ஒன்றை தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தில் தமிழகத்தில் சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்துதல், தாய்மைப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவ சேவையை மேம்படுத்துதல், தொற்றா நோய்களின் சுமையை குறைத்தல் ஆகியவையே நோக்கமாகும்
தமிழகத்தில் தொற்றாத நோய்கள் மூலம் இறப்பவர்கள் எண்ணிக்கை 69 சதவீதமாக உள்ளது. எனவே தமிழக சுகாதார துறைக்கு, தொற்று நோயைவிட தொற்றாத நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் அதிக முன்னெற்பாடுகள் செய்வது அத்தியாவசியமாகியுள்ளது.
இதனையடுத்து மேற்கண்ட திட்டத்தை அமல்படுத்த தேவையான நிதியாக தான் உலக வங்கி ரூ.2,009 கோடியை தமிழக அரசுக்கு கடனாக வழங்குகிறது. இந்த நிதியை உலக வங்கி தமிழக அரசுக்கு மூன்று கட்டங்களாக வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்ச்சியில் பேசிய மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் சமீர் குமார், சுகாதார சேவைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது எப்படி என்பதில் தமிழகம் முன்னோடியாக திகழ்வதாக பாராட்டினார்.
மற்ற மாநிலங்கள் தமிழகத்தை பார்த்து தங்களது மாநிலங்களில் சுகாதாரத்துறை சார்பில் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகத்தின் இந்த பயணத்தில் உலக வங்கி உதவுவது மகிழ்ச்சிக்குரியதாக உள்ளதாக குறிப்பிட்டார்.