தாண்டவம் ஆடும் கொரோனா.. இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கும் தினசரி பாதிப்பு.. விரைவில் கட்டுப்பாடுகள்?
டெல்லி: உலகெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் நேற்று மட்டும் சுமார் 1.85 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிற்பகுதியில் குறைந்திருந்த கொரோனாவின் தீவிர தன்மை சில மாதங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிரிட்டனைத் தவிர எந்த நாடும் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தவில்லை என்றாலும்கூட கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியா கொரோனா பாதிப்பு
இந்தியாவில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. நேற்று மட்டும் சுமார் 1.85 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்தியாவில் இதுவரை 1.39 கோடி பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 1,207 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கொரோனா உயிரிழப்புகள் 1,73,152 ஆக உயர்ந்துள்ளது.
உலகளவில் கொரோனா பாதிப்பு
உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,03,136 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.82 கோடியாக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 13,507 பேர் பலியாகியுள்ள நிலையில், ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்பும் 29,84,895 ஆக அதிகரித்துள்ளது. தற்போது உலகெங்கும் 2,42,30,075 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டாப் 5 நாடுகள்
இந்தியாவைத் தொடர்ந்து பிரேசில் மற்றும் அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 75,998 பேருக்கும் அமெரிக்காவில் 78,430 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல துருக்கி நாட்டில் நேற்று மட்டும் 62,797 பேருக்கும் பிரான்ஸ் நாட்டில் 43,505 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா
தினசரி கொரேனா உயிரிழப்புகளைப் பொறுத்தவை பிரேசில் மிக மோசமாக உள்ளது. அங்கு 3,462 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அடுத்து அமெரிக்கா, போலந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் தினசரி கொரோனா உயிரிழப்பு அதிகமாக உள்ளது. இதுவரை கொரோனா காரணமாக அதிகபட்சமாக அமெரிக்க 578,086 பேரை இழந்துள்ளது. அடுத்த பிரேசில் 362,180 பேரையும், மெக்சிகோ 2,10,294 பேரையும் இழந்துள்ளன.
புதிய கட்டுப்பாடுகள்
இந்தியாவில் வைரஸ் பரவலின் நிலை மோசமாக உள்ளது. முதலாவது அலையைவிட இரண்டாவது அலை மிக மோசமாக உள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. மகாராஷ்டிரா அடுத்த 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது. அதேபோல பல மாநிலங்கள் இரவு நேர லாக்டவுனை அமல்படுத்தியுள்ளன. கொரோனா தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விரைவில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.