மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. உலக நாடுகளில் அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பு.. என்ன காரணம்
டெல்லி: உலகெங்கும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஒரே நாளில் லட்சம் 7.12 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகவே உலக நாடுகளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது கொரோனா வைரஸ்தான். சீனாவில் பரவ தொடங்கிய கொரோனாவை சமாளிக்க முடியாமல் உலக நாடுகள் அனைத்தும் திணறி வருகிறது.
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது தான் இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா முதல் அலையை ஏற்படுத்தியது என்றால் ஆல்பா, டெல்டா கொரோனா அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தியது.
இந்தியாவில் கட்டுக்குள் வந்த கொரோனா... 2,487 பேர் பாதிப்பு - 13 பேர் மரணம்
கொரோனா பாதிப்பு
இப்போது ஓமிக்ரான் மற்றும் அதன் திரிபுகள் உலகெங்கும் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா வைரஸ்கள் பல்வேறு நாடுகளிடையே மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் ஒரே நாளில் கொரோனாவால் 7.12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக இதுவரை வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 522,783,902ஆக அதிகரித்துள்ளது. அதேபோல ஒரே நாளில் 5.64 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
எந்த நாடுகள்
உலகளவில் தற்போது அதிக தினசரி கேஸ்களை கொண்ட நாடுகள் பட்டியலில் வடகொரியா முதலில் உள்ளது. கடந்த சில நாட்களாகவே அங்கு கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் 3.92 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தைவான் நாட்டில் 61 ஆயிரம் பேருக்கும் அமெரிக்காவில் 53 ஆயிரம் 1,86,253 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு மெல்ல உயரத் தொடங்கி உள்ளது.
கொரோனா உயிரிழப்புகள்
கொரோனா வேக்சின், முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்ட பணிகள் காரணமாக கொரோனா உயிரிழப்புகள் முழுமையாகக் கட்டுக்குள் வந்துவிட்டது. உலகளவில் நேற்று ஒரே நாளில் 933 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக பிரான்ஸ் நாட்டில் 126 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல அமெரிக்காவில் 106 பேரும் இத்தாலியில் 102 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், பிரேசில் (89), ரஷ்யா (89), ஜெர்மனி (86) நாடுகளிலும் தினசரி உயிரிழப்பு அதிகமாக உள்ளது.
கொரோனா வேக்சின்
வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட பின்னர், கடந்த சில மாதங்களாகவே வைரஸ் பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வந்தது. இருப்பினும், இப்போது சீனா, தைவான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதற்கு ஓமிக்ரான் திரிபுகளில் ஒன்றான ஓமிக்ரான் XE முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இது முந்தைய கொரோனா வகைகளைக் காட்டிலும் வேகமாகப் பரவுவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதேநேரம் இது பெரும்பாலும் லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துவது ஒரு நல்ல விஷயமாகும்.