ஒரே நாளில் 7.29லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. கட்டுக்குள் வர நீண்ட காலம் ஆகும்.. உலக நாடுகள் பீதி
டெல்லி: உலகளவில் நேற்று ஒரே நாளில் 7,29,220 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பரவல் இப்போதைக்குக் கட்டுக்குள் வராது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாகவே மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகப் பிரிட்டன், பிரான்ஸ், போலந்து போன்ற நாடுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன.
மறுபுறம் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை உலகெங்கும் சுமார் 78 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 7,29,220 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை உலகெங்கும் 13,80,00,548 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல நேற்று தினசரி கொரோனா உயிரிழப்பும் 12,714 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை கொரோனா காரணமாக 29,71,104 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில், ரஷ்யா, இத்தாலி ஆகிய நாடுகளில் கொரோனா உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது
இந்தியாவில் என்ன நிலை
இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 1,85,248 ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை 1,38,71,321 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மட்டும் கொரோனாவால் 1,026 பேர் பலியாகியுள்ள நிலையில், இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 1,72,115ஐ கடந்துள்ளது.
உலக நாடுகளில் என்ன நிலை
இந்தியாவுக்கு அடுத்து பிரேசில் நாட்டில் 80,157 பேருக்கும் அமெரிக்காவில் 76,613 பேருக்கும் துருக்கியில் 59,187 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 3,20,69,677 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் இதுவரை 1,36,01,566 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
உயிரிழப்புகள் எங்கு அதிகம்
மேலும், கொரோனா உயிரிழப்புகளைப் பொறுத்தவரைப் பிரேசில் நாட்டில் நேற்று அதிகபட்சமாக 3,687 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அமெரிக்காவில் 808 பேரும் போலந்து நாட்டில் 644 பேருக்கும் இத்தாலி நாட்டில் 476 பேரும் கொரோனாவால் பலியாகியுள்ளனர். அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகள் கொரோனா காரணமாக அதிக நபர்களை இழந்துள்ளது.
நீண்ட காலம் ஆகும்
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், உருமாறிய கொரோனா போன்ற குழப்பம், சிகிச்சை முறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் ஆகியவை காரணமாக கொரோனா முடிவுக்கு வர இன்னும் பல காலம் ஆகும் என்றார். மேலும், தங்களுக்கு கொரோனா வராது என இளம் வயதினர் அதீதமாக நம்புகின்றனர் என்றும் ஆனால் இது முற்றிலும் தவறானது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.