சர்வதேச சந்தையை பொறுத்தே பெட்ரோல் விலை ஏற்றம்.. அதிக விலை என்பது தவறான கருத்து... அமைச்சர் பதில்
டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் வரலாறு காணாத வகையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகக் கூறும் கருத்து தவறானது என்று பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையைப் பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கொரோனா பரவ தொடங்கிய போதும், கச்சா எண்ணெய் விலை பூஜ்ஜியம் டாலருக்கும் கீழே சென்றது. அப்போது பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இன்று பெட்ரோல் விலை 30 பைசாவும் டீசல் விலை 25 பைசாவும் உயர்த்தப்பட்டன. அதேபோல நேற்றும் பெட்ரோல், டீசல் விலை 35 பைசா வரை உயர்த்தப்பட்டன.
காங்கிரஸ் குற்றச்சாட்டு
இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால் தனது கிராமத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார். மேலும், "இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இப்போது உச்சத்தில் உள்ளன. ஆனால், கச்சா எண்ணெய் விலை அவ்வளவு அதிகமாக இல்லை. விலைகளை முறைப்படுத்த அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்றார்.
அமைச்சர் பதில்
இதற்குப் பதிலளித்த பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "இன்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 61 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. வேணுகோபாலின் சொந்த மாநிலமான கேரளாவைச் சேர்ந்த பலரும் வளைகுடா பகுதியில் தங்கியுள்ளனர். அவர்களிடம் கேட்டாலே கச்சா எண்ணெய் தற்போது என்ன விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது தெரியும்.
மத்திய மாநில அரசுகள்
இது நாம் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டிய ஒரு பிரச்சினை. இதில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு என இரு தரப்பிற்கும் பொறுப்பு உள்ளது. மத்திய அரசு கலால் வரியை அதிகரித்துள்ளது. அதேபோல மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மதிப்புக் கூட்டு வரியை அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களில் மத்திய அரசு சில நேரங்களில் கலால் வரியை குறைத்துள்ளது.
250 நாட்கள் ஒரே விலை
அதிலும் கடந்த 300 நாட்களில், 250 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டது. எனவே, வரலாற்றிலேயே அதிக விலைக்கு இப்போதுதான் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது என்று பிரச்சாரம் செய்வது தவறானது" என்றார்.
சர்வதேச சந்தை
மேலும், நம் நாட்டில் சுமார் 85% கச்சா எண்ணெய் தேவை வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது என்று கூறிய அவர், இதனால் சர்வதேச சந்தையில் விலை ஏற்றம் ஏற்பட்டால் அவை இந்தியச் சந்தையிலும் எதிரொலிக்கும் என்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது இங்கும் அவற்றின் விலை குறைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார். சந்தையின் நிலையைப் பொறுத்தே பெட்ரோல் டீசல் விலைகளை நிறுவனங்கள் முடிவு செய்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.