2020-ல் திருப்பங்களை தந்த டெல்லி, பீகார் சட்டசபை தேர்தல்களும் இடைத்தேர்தல்களும்!
டெல்லி: 2020-ம் ஆண்டு டெல்லி, பீகார் சட்டசபை தேர்தல்கள் எதிர்பாராத திருப்பங்களை தந்தன. அதேபோல் மபி உள்ளிட்ட மாநிலங்களின் இடைத்தேர்தல்களும் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தன.
2020-ம் ஆண்டு தொடக்கத்தில் 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. டெல்லியைப் பொறுத்தவரையில் ஆம் ஆத்மி கட்சி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவியது.
டெல்லியை எப்படியும் கைப்பற்றிவிடுவோம் என கங்கணம் கட்டிக் கொண்டு பாஜக களமாடிப் பார்த்தது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய் ஆண்டுகளாகிவிட்ட நிலையில் உயிர்த்தெழவும் முயற்சித்தது. பொதுவாக தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்புகள் ஆம் ஆத்மியே ஆட்சியை தக்க வைக்கும் என கூறி இருந்தன.
ஆம் ஆத்மி அமோக வெற்றி
ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 62-ல் ஆம் ஆத்மி கட்சி விஸ்வரூப வெற்றியைப் பெற்றது. டபுள் டிஜிட் இடங்களை எப்படியும் பெறும் என கூறப்பட்ட பாஜக 8 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காமல் போன பரிதாபம் நிகழ்ந்தது. 2020-ம் ஆண்டு இறுதிப் பகுதியில் பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
பீகார் தேர்தல்
243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டசபை தேர்தலில் ஜேடியூ-பாஜக, ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் மோதின. அதேநேரத்தில் பாஜகவுடன் மட்டும் கூட்டணி என கூறிக் கொண்டு சிராக் பாஸ்வானில் லோக் ஜனசக்தி ஜேடியூவை மட்டும் எதிர்த்து போட்டியிட்டது. தெலுங்கானாவின் ஓவைசி கட்சியும் பீகார் தேர்தலில் போட்டியிட்டது.
ஆட்சியை தக்க பாஜக-ஜேடியூ
இந்த தேர்தலில் ஆர்ஜேடி கட்சி 75 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியானது. கடந்த தேர்தலில் வெறும் 21 இடங்களைப் பெற்ற பாஜக இம்முறை 74 இடங்களுடன் 2-வது இடத்துக்கு வந்தது. 2015 தேர்தலில் 78 இடங்களைப் பெற்ற ஜேடியூவால் 43 தொகுதிகளில்தான் வெல்ல முடிந்தது. ஓவைசி கட்சி 5 இடங்களில் வென்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. காங்கிரஸ் 19, இடதுசாரிகள் 12 இடங்களில் வென்ற போது பாஜக-ஜேடியூ கூட்டணி ஆட்சியே மீண்டும் அமைந்தது.
சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்கள்
சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களானது சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, மபி, மணிப்பூர், நாகாலாந்து, ஒடிஷா, உ.பி மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நடைபெற்றது. மத்திய பிரதேசத்தில் கமல்நாத் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி காங்.எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த கையோடு பாஜகவுக்கு தாவினர். இதனால் அங்கு நடைபெற்ற 28 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆளும் பாஜக அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தேர்தல் நடைபெற்றது. ஆனால் பாஜக 19 இடங்களில் வென்று ம.பி.யில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
பாஜகவுக்கு சாதகம்
தெலுங்கானாவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜக வென்றது. உத்தரப்பிரதேசத்தில் 7 சட்டசபை தொகுதிகளில் 6-ல் பாஜக வென்றது; குஜராத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 8தொகுதிகளையுமே பாஜக அள்ளியது. ஆனால் ஜார்க்கண்ட் மாநில 2 தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜக வெல்ல முடியவில்லை.