சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுவித்தது மகாராஷ்டிர மாநில அரசுதான்.. பேரறிவாளனுக்கு ஆர்டிஐ பதில்
டெல்லி: நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது மாநில அரசுதான் என தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
1993-ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 257 பேர் மரணமடைந்தனர். 2000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு தடா சிறப்பு நீதிமன்றத்தில் ஆயுத தடை சட்டத்தின்படி6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் கருணை அடிப்படையில் குறைந்தபட்ச தண்டனையாக 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
முன்கூட்டியே விடுதலை
தடா சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டு, மத்திய புலனாய்வு துறையான சி.பி.ஐ-யால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் நீதிமன்றத்தால் 5 ஆண்டுகளாகத் தண்டனைக் குறைப்பு பெற்ற சஞ்சய் தத், மேலும் தண்டனைக் கழிவு வழங்கப்பட்டு கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி அன்று மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள எரவாடா சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்.
காலம் தாழ்த்தும் ஆளுநர்
இது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இந்த நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலையில், அரசியல் சாசன சட்டப்பிரிவு 161-ன்படி தமிழக அரசின் அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பேரறிவாளன்
இந்த நிலையில் நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் ஒப்புதல் பெறவில்லை என கடந்த மாதம் 16-ஆம் தேதி ஆர்டிஐ மூலம் பேரறிவாளன் தரப்பு தகவல் பெற்றதாக கூறப்படுகிறது. சஞ்சய் தத்தை விடுவிக்கும் முன்பு மகாராஷ்டிர அரசு மத்திய அரசிடம் கருத்தை கேட்கவில்லை என பேரறிவாளன் தரப்பு கூறியிருந்தது.
கேள்வி
இந்த நிலையில் சஞ்சய் தத்தை விடுதலை செய்தது குறித்து ஆர்டிஐ மூலம் ஏர்வாடா சிறை நிர்வாகத்துக்கு பேரறிவாளன் கேள்வி எழுப்பியிருந்தார். அதில் இந்தி நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது மகாராஷ்டிர அரசுதான். சஞ்சய் தத்தை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசோடு எவ்வித அதிகாரப்பூர்வ தொடர்பு இல்லை. மத்திய அரசு நிராகரித்த 55 நாட்களில் மாநில அரசு சஞ்சய் தத்தை விடுவித்துள்ளது என ஆர்டிஐ மூலம் ஏர்வாடா சிறை நிர்வாகம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.