நேற்று உதய்பூர் கொலையாளி, இன்று காஷ்மீர் பயங்கரவாதி! அடுத்தடுத்து அடிபடும் பாஜக பெயர் -நடந்தது என்ன?
டெல்லி: உதய்பூரில் டெய்லரை கொலை செய்தவர்களில் ஒருவர் பாஜகவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது நேற்று அம்பலமான நிலையில் இன்று காஷ்மீரில் கைதான பயங்கரவாதி பாஜகவில் பொறுப்பில் இருந்தது தெரியவந்திருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் இருவரை துக்சா கிராம மக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், குண்டுகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன.
தமிழுக்கு மாபெரும் “கவுரவம்”.. ஹஜ் யாத்திரையின் அரஃபா உரையை தமிழிலும் மொழிபெயர்க்க சவூதி அரசு முடிவு
பாஜகவில் பயங்கரவாதி
கைது செய்யப்பட்ட பைசல் அஹமது மற்றும் தலிப் ஹுசைன் ஆகிய இருவரில் தலிப் ஹுசைன் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி என்பது தெரிய வந்திருக்கிறது. ரஜோரி பகுதியை சேர்ந்த தலிப் ஹுசைன், பாஜகவில் இணைந்து மூத்த தலைவர்கள் பலருடன் புகைப்படங்களை எடுத்திருக்கிறார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பாஜகவின் சிறுபான்மை பிரிவு ஊடக அணி பொறுப்பாளராக இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை
இதுகுறித்து அப்பகுதி பாஜக பிரமுகர்கள் கூறுகையில், ஆன்லைன் வாயிலாக பலர் கட்சி இணைவதால் அவர்களின் முழு பின்னணி தங்களுக்கு தெரியாமல் போவதாக கூறியுள்ளனர். ஆன்லைனில் இணைபவர்களின் பின்னணி குறித்து ஆராய்வதில்லை என்பதை அக்கட்சி நிர்வாகிகள் ஒப்புக்கொண்டு இருக்கின்றனர். இந்த தகவல் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உதய்பூர் டெய்லர் கொலை
இதேபோல்தான் ராஜஸ்தானிலும் நேற்று ஒரு தகவல் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்ததாக கூறி ராஜஸ்தானின் உதய்பூரில் கண்ணையா லால் என்ற தையல் கலைஞர் 2 பேரால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பாஜகவுடன் தொடர்பு
இந்தியாவையே அதிர வைத்த அந்த கொடூர செயலை செய்த இருவரும் எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி கையில் கத்தியுடன் தாங்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு மிரட்டும் தொனியில் பேசினர். அவர்கள் இருவரையும் கைது செய்த தேசிய புலனாய்வு முகமை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இதற்கிடையே இருவரில் ரியாஸ் அட்டாரிக் என்ற நபர் பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக பழகிய புகைப்படங்கள் நேற்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.
பாஜக பிரமுகர்களுடன் நெருக்கம்
சம்பந்தப்பட்ட நபர் பாஜகவின் சிறுபான்மை அணியில் சேர விரும்பியதை அக்கட்சியின் நிர்வாகியே தனியார் ஆங்கில தொலைக்காட்சி செய்தியாளரிடம் தெரிவித்த வீடியோவும் நேற்று வெளியானது. கொலையாளி ரியாஸ் அட்டாரிக்கு பாஜக தலைவர் ஒருவர் கழுத்தில் பாஜக கட்சித்துண்டு அணிவித்த புகைப்படங்களும் வெளியாகின சர்ச்சையை ஏற்படுத்தின. பலரும் இவற்றை பகிர்ந்து பாஜகவை விமர்சித்து வந்தனர்.
மக்கள் அதிர்ச்சி
இது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், பாஜக ரியாஸ் அட்டாரிக் பாஜகவை சேர்ந்தவர் இல்லை என மறுத்தது. தமிழ்நாட்டிலும் கொலை, ஆள் கடத்தல், நிதி மோசடி, ரவுடியிசம் போன்ற வழக்குகளை கொண்டவர்களை பாஜகவில் சேர்ப்பது விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பயங்கரவாத வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் நாட்டை ஆளும் பாஜகவில் பொறுப்புகளில் இருந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.