International Yoga Day: கொரோனா காலத்தில் உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது யோகா- பிரதமர் மோடி
டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உலகத்துக்கு நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது யோகா கலை என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
7-வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ஆற்றிய உரை:
கொரோனா பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. ஆனாலும் மக்களுக்கு யோகா மீதான ஆர்வம் குறைந்துவிடவில்லை. யோகா என்பது எதிர்மறை சிந்தனையில் இருந்து ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு மனதை மாற்றக் கூடியது.
கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், நோயாளிகளுக்கு மூச்சு பயிற்சிக்காக யோகா ஆசனங்கள் சொல்லித் தரும் படங்கள் வெளியாகி இருந்தன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த யோகா உதவியாக இருந்தது.
யோகா தினம்: அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் சுவாச மண்டலங்களை சீரமைக்க, வலுவாக்க யோகா உதவுகிறது என்கின்றனர் சர்வதேச வல்லுநர்கள். உலகின் அனைத்து பகுதிகளுக்கும் யோகா கலை சென்றடைய நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து தற்போது M-yoga App என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து மொழிகளிலும் யோகா கலைக்கான பயிற்சியை தரும் வீடியோக்கள் இந்த செயலியில் உள்ளன. ஒரே உலகம் ஒரே சுகாதாரம் என்ற நமது லட்சியத்தை அடைய இது மிகப் பெரும் உதவியாக இருக்கும்.