2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால்... என்னதிது, ராம்தேவ் டப்புன்னு இப்படி சொல்லிட்டாரு!
டெல்லி: 2 குழந்தைகளுக்கு மேல் உள்ள யாரும் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்று ராம்தேவ் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராம்தேவ் என்றால் பல நேரங்களில் சர்ச்சைப் பேச்சுதான். ஏதாவது பேசி விட்டுப் போய் விடுவார். அது காட்டுத் தீயாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில் தற்போது அவர் பேசியுள்ள பேச்சும் அனலைக் கிளப்பியுள்ளது.
அதாவது 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அவர்களுக்கு வாக்குரிமையைப் பறிக்க வேண்டும் என்று ராம்தேவ் கூறியுள்ளார். இதுதான் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து அவர் பேசியுள்ள பேச்சின் சில முக்கியப் பகுதிகள்:
இந்த நாட்டில் திருமணமாகாமல் இருக்கும் பிரம்மச்சாரிகளுக்கு நாம் சிறப்பு மரியாதை செய்ய வேண்டும். அதேசமயம் திருமணம் செய்ய முடிவு எடுப்பவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.
திருமணம் செய்வோர் அதிகபட்சம் 2 குழந்தைகள் மட்டுமே பெற அனுமதிக்கப்பட வேண்டும். அதற்கு மேல் பெறக் கூடாது. யாருக்காவது 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால அவர்கள் தேர்தலில் வாக்களிக்க தடை செய்ய வேண்டும். அந்த உரிமையைப் பறிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராம்தேவ்.
சமீபத்தில் பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் பேசுகையில் இந்துக்கள் நான்கு குழந்தைகள் பெற வேண்டும். அதை கண்டிப்பாக பாலோ செய்ய வேண்டும். அதில் ஒரு குழந்தையை சாதுவாக மாற அனுமதிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் அவருக்கு நேர் மாறாக பேசியுள்ளார் ராம்தேவ்.