இதெல்லாம் எதுக்காம்? யானை மேல் உட்கார்ந்து யோகா செய்யப் போய் பரிதாபமாக பொத்தென விழுந்த பாபா ராம்தேவ்
டெல்லி: யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ் யானை மீது அமர்ந்து யோகா செய்ய முயன்றபோது கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பதஞ்சலி நிறுவனம் என்ற பெயரில் பல்வேறு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருபவர் யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ். இவரது நிறுவனம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்து பெரும் சர்ச்சையில் சிக்கியது.
யானை மீது யோகா
இதேபோல் பல சர்ச்சைகளில் சிக்கியவர் பாபா ராம்தேவ். இந்த நிலையில் தமது யோகா சாகசங்களில் ஒன்றாக யானை மீது யோகாசனம் செய்ய முடிவெடுத்தார் ராம்தேவ்.
அலங்கரித்த யானை
இதற்காக அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஏறி ஹாயாக அமர்ந்தார். வழக்கம் போல கால்களை மடித்து யோகாசனம் செய்ய முயன்றார் ராம்தேவ். அதுவரை அமைதியாக பொறுமையாக நின்று கொண்டிருந்தது யானை.
யானை மீதிருந்து விழுந்த ராம்தேவ்
பின்னர் திடீரென லேசாக யானை நகர்ந்தது. இதனால் யானை மீது அமர்ந்திருந்த பாபா ராம்தேவ் அப்படியே உட்கார்ந்த நிலையிலேயே பொத்தென கீழே விழுந்தார். அவர் கீழே விழுந்ததை பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
|
வைரலாகும் வீடியோ
கீழே விழுந்த உடனே ராம்தேவ் எதுவும் நடக்காதவர் போல எழுந்து நின்றார். இருந்தபோதும் அவருக்கு முதுகு தண்டில் பலத்த அடிபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ராம்தேவ், யானை மீது அமர்ந்திருந்த நிலையில் கீழே பொத்தென விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.