யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு
டெல்லி: யோகா தினத்தை தங்கள் நாட்டில் கொண்டாட வேண்டும் என உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் வாழும் மக்கள் யோகா செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக அதை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட ஐ.நா. சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது.
அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதே ஆண்டு டெல்லியில் நடந்த பிரமாண்ட விழாவில் 191 நாட்டு பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடியும் பங்கேற்று யோகா செய்தார்.
2016-ம் ஆண்டு சண்டிகரிலும், 2017-ம் ஆண்டு லக்னோவிலும், 2018-ம் ஆண்டு டேராடூன் நகரிலும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. அப்போது, யோகா மிகப்பெரிய மக்கள் இயக்கமாக உருவாகி வருவதாகக் கூறிய பிரதமர், உலகை துன்பத்திலிருந்து மீட்டு மகிழ்ச்சியான பாதைக்கு யோகா அழைத்துச் செல்வதாகவும் கூறினார். உலகை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய சக்தியாக யோகா உருவெடுத்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தநிலையில், வருகிற 21-ந் தேதி ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடக்க உள்ள யோகா தின கொண்டாட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார்.
பிரதமர் மோடி தலைமையில் 30 ஆயிரம் பேர் திரண்டு வந்து யோகா பயிற்சி செய்ய உள்ளனர். இதேபோன்று தலைநகர் டெல்லியில் ராஜபாட்டையில் யோகா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை டெல்லி மாநகராட்சியும் ஆயுஷ் அமைச்சகமும் இணைந்து செய்து வருகின்றன.
Across all continents, the #YogaDay2019 celebrations have begun with immense fervour. I urge you all to join the Yoga Day programmes in your respective nations and enrich the Yoga programmes with your participation. pic.twitter.com/bmA5ublVYE
— Narendra Modi (@narendramodi) June 16, 2019
இந்தநிலையில், யோகா தினம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, யோகா தினத்தை உலக நாடுகள் கொண்டாட வேண்டும். அனைத்து கண்டங்களிலும், # YogaDay2019 கொண்டாட்டங்கள் மகத்தான உற்சாகத்துடன் தொடங்கியுள்ளன. உலக நாடுகள் தங்கள் பங்களிப்பின் மூலம் யோகாவை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.