தேர்தல் முடிந்த கையோடு அதிரடி.. அயோத்தி விரைந்த யோகி ஆதித்யநாத்.. ராமர் சிலை திறப்பு
Recommended Video
டெல்லி: லோக்சபா தேர்தல் நிறைவடைந்த பிறகு, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல் முறையாக, இன்று ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார். அது கோதண்ட ராமர் சிலை திறப்பு விழா.
லோக்சபா தேர்தலின்போது, தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் உ.பி முதல்வரான ஆதித்யநாத் (பாஜக). சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதால் அவ்வப்போது தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை விதிப்புக்கும் உள்ளானார்.
இருப்பினும், உ.பி.யில், மாயாவதி-அகிலேஷ் யாதவ் கூட்டணியை முறியடித்து, பாஜக அமோக வெற்றி பெற்றது. மத்தியிலும் ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் சில நாள் ஓய்வுக்கு பிறகு, இன்று கோதண்ட ராமர் சிலை திறப்பு விழாவில், யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.
அமித்ஷாவுடன் அதிகாரப் போட்டி வெடித்தது- ராஜ்நாத்சிங்குக்கு 6 அமைச்சரவை குழுவில் இடம்!
7 அடி சிலை
அயோத்தி நகரில், அமைந்துள்ள, அயோத்தி ஆய்வு அமைப்பின், கைவினைப்பொருள் மியூசியத்தில், ரோஸ்வுட் மரத்திலான 7 அடி உயர கோதண்ட ராமர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதை இன்று முறைப்படி, திறந்து வைத்தார் ஆதித்யநாத். ராமபிரான் வாழ்க்கை 5 கட்டங்களாக பிரிக்கப்பட்டு பக்தர்களால் வணங்கப்படுகிறது. பால ராமர், ராஜா ராமன், கோதண்டராமர் போன்றவை அதில் சில வழிபாட்டு முறைகள்.
கோதண்ட ராமர்
நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு வகையான ராமர் அவதான கட்டங்களை முன்வைத்து வணங்குவார்கள். தென் இந்தியாவில் உள்ள கோயில்களில் ராமர் வில்லுடன் காட்சியளிக்கும், கோதண்ட ராமர் வழிபாடு புகழ்பெற்றது. எனவே, இந்த கோதண்ட ராமர் சிலை கர்நாடகாவை சேர்ந்த ஜனாதிபதி விருது பெற்ற, கலைஞரிடமிருந்து ரூ.35 லட்சம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.
தபால் தலை
கோதண்ட ராமர் சிலையை திறந்து வைப்பதோடு, கோதண்ட ராமர் உருவம் பொரித்த, தபால் தலையையும், யோகி ஆதித்யநாத் இன்று வெளியிட்டார். பின்னர், குப்தார்காட் பகுதியில் நடைபெறும் பஸ் நிலைய கட்டுமானப் பணிகள், ராம்கி பவுரி பணிகள் போன்றவற்றையும், யோகி பார்வையிடுகிறார்.
ராமர் கோயில்
சரயு நதிக்கரையில், ராமபிரானுக்கு 221 மீட்டர் உயரத்தில் சிலை அமைக்கப்படும் என உத்தர பிரதேச அரசு ஏற்கனவே அறிவித்த நிலையில், அந்த பணிகளும், இறுதிவடிவம் பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளை, சு.சாமி போன்ற, பாஜகவிலுள்ள தீவிர வலதுசாரியினர் முன் வைத்து வரும் நிலையில், யோகி ஆதித்யநாத்தின், அயோத்தி வருகை முக்கியத்துவம் பெறுகிறது.