தமிழக மக்களுக்கே அவமரியாதை இழைக்கப்பட்டுள்ளது.. ஆவேசமான ராகுல் காந்தி
டெல்லி: தமிழ்நாடு மக்கள் மற்றும் தமிழ்மொழி உரிமை சார்ந்த பிரச்சினையில், தமிழ் மக்களின் உரிமையை பறிக்கும் செயல் அவையில் நடந்துள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
லோக்சபாவில் இன்று அரசு அலுவல் மொழி தொடர்பான கேள்விக்கு மத்திய இணையமைச்சர் நித்தியானந்த ராய் பதிலளித்தார். அப்போது அந்த பதில் தொடர்பாக துணைக் கேள்வி கேட்பதற்கு திமுக எம்பிக்கள் விரும்பினர். ஆனால், இதற்கு சபாநாயகர் அனுமதி தராமல் அடுத்த கேள்விக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
இதற்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி எழுந்திருத்து, தமிழ்நாடு மக்களின் உணர்வு சார்ந்த விஷயம் இது. எனவே, துணைக் கேள்வி கேட்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால், அதை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்கவில்லை. இதை கண்டித்து திமுக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அவைக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய ராகுல் காந்தி, இதுபற்றி தெரிவித்தது: ஒரு கேள்வி கேட்கப்பட்டு அதற்கான பதில் தரப்படும்போது, அதில் சந்தேகம் எழும்போது துணைக் கேள்வி கேட்க அனுமதிக்கப்பட வேண்டும். சபாநாயகர் என்னை பேச அனுமதிக்காமல் இருக்கலாம். எனது உரிமைகள் முடக்கப்படலாம். ஆனால் தமிழ்மொழி தொடர்பாக துணை கேள்வி கேட்பதற்கு, மொத்த தமிழ்நாட்டு மக்களும் விரும்புகிறார்கள். அந்த உணர்வுகளை சபாநாயகர் புரிந்து கொள்ளவில்லை.
இது ஒரு நபரைப் பற்றியது அல்ல, இது ராகுல் காந்தியைப் பற்றியது அல்ல, இது தமிழக மக்களையும் அவர்களின் மொழியையும் பற்றியது, அவர்கள் கூட அந்த கேள்வியைக் கேட்க அனுமதிக்கப்படவில்லை, இது முற்றிலும் தமிழக மக்களுக்கு எதிரான ஒரு அவமானம்.
இது அனைத்து மாநிலங்களுக்கும், எல்லா மொழிகளுக்கும் சொந்தமான ஒரு இடம். இங்கே விவாதம் இருக்க வேண்டும், ஆனால் இப்போதெல்லாம் எந்த விவாதமும் நடக்கவில்லை. யாரும் கேள்வி கேட்க முடியாது. லோக்சபா ஒரு வழி போக்குவரத்து சாலை போல மாறிவிட்டது. லோக்சபா ஒரு ஒலிபெருக்கி போல மாறிவிட்டது. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.