கண்களில் அத்தனை வெறி.. டெல்லியில் ஆயுதங்களுடன்.. தெருத் தெருவாக திரிந்த சிறார்கள், இளைஞர்கள்
டெல்லி: மனதில் விதைக்கப்பட்ட விஷத்தால் ஆயுதங்களை தூக்கி கொண்டு கொலை வெறியாக 18வயது கூட நிரம்பாத இளைஞர்கள் டெல்லி நகர சாலைகளில் சுற்றும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இவர்கள் கண்ணில் சிக்குவோரை எல்லாம் கும்பல் கும்பலாக தாக்குகிறார்கள். எதற்கும் அச்சப்படாமல் செய்யும் இந்த காரியத்திற்கு யார் பொறுப்பேற்க போகிறார்கள். தவறாக வழிநடத்தப்பட்ட இந்த இளைஞர்களின் எதிர்காலம் இனி என்னவாகபோகிறது என்பது பெரும் கேள்விதான்.
Recommended Video
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த இரு மாதங்களாக போராட்டங்கள் நடந்து வருகிறது. டெல்லி ஷாஹீன்பாக்கில் பெண்கள் போராடி வருகிறார்கள். இந்நிலையில் டெல்லி ஷாஹீன்பாக்கை போல் ஜாப்ராபாத்தில் கடந்த 23ம் தேதி முதல் போராட்டம் தொடங்கியது.
இந்த போராட்டத்திற்கு எதிராக , அதாவது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக போராட்டமும் அதே பகுதியில் நடந்தது. இதனால் இரு தரப்பும் மோதிக்கொண்டன. அதன்பிறகு வடகிழக்கு டெல்லி முழுவதும் கலவரம் பரவியது. இதவரை இந்த மோதலில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.100க்கணக்கானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஏன் அமைதி
டெல்லியில் கடந்த 24ம் தேதி முதல் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் கையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வருகிறார்கள். இவர்கள் மனதில் விதைக்கப்பட்ட விஷத்தால் என்ன செய்கிறோம் என்பதை உணராமல் கண்ணில் சிக்குவோரை எல்லாம் எதிரிகளாக பாவித்து தாக்கி வருகிறார்கள். இவர்களை தடுக்க வேண்டிய போலீசார் ஏன் தடுக்காமல் அமைதி காத்தார்கள் என்பது இன்று வரை விடை தெரியாத கேள்வி.
18வயது இளைஞர்கள்
அதேபோல் டெல்லி வன்முறை தொடர்பான பல்வேறு வீடியோக்கள் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் கூட தங்கள் கையில் ஆயுதங்களை ஏந்தியபடி ரவுடி தோரணையில் அச்சமில்லாமல் ஆவேசமாக நடந்த செல்வது தெரிகிறது. கலவரத்தில் ஈடுபட்டதாக பரவி வரும் இளைஞர்களின் புகைப்படங்களை பார்க்கும் போது பலருக்கும் வயது 18 வயது முதல் 25 வயது தான் இருக்கும்.
விஷம் விதைத்து யார்
ஆக்ரோசத்துடன் அவர்கள் மற்றொரு தரப்பினரை தாக்கிய நிலையில், இரு தரப்புக்கும் இடையே இந்த மோதல் வன்முறையாக மாறியது . இதன் காரணமாக இன்று பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இரும்பு கம்பிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு இளைஞர்கள் ரத்த வெள்ளத்தில் இருக்கும் பல புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. இதை பார்க்கும் போது ஏன் அவர்களுக்கு இத்தனை வன்மம். யார் இந்த விஷத்தை அவர்களின் மனதில் விதைத்தது என்று கேள்வி எழுகிறது. அதற்கு பதிலை அரசு தான் சொல்ல வேண்டும்.
பெற்றோர்கள் தவறு
கையில் பயங்கரமான ஆயுதங்களை தூக்கி கொண்டு திரியும் இளைஞர்களுக்கு அவர்களின் உருவம் டிவி, ஊடகம். சமூக வலைதளம் என மக்கள் பார்க்கும் எல்லா இடத்திலும் தெரியும் என்பதை தெரிந்தே அவர்கள் இப்படி செய்கிறார்கள். இவர்களின் பெற்றோர்கள் எப்படி இதை அனுமதிக்கிறார்கள். அவர்களுக்கு குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கொஞ்சுமும் அக்கறை இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது.
கவலைக்குரிய கேள்வி
18 வயது நிரம்பாத பல சிறுவர்கள் ஆயுதங்களை தூக்கி கொண்டு கொலை செய்ய துணிவதை பார்க்கும் போது சமூகம் என்ன மாதிரியான விஷயங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுத்தது. பள்ளி ஆசிரியர்கள் அவர்களுக்கு கற்றுக்கொடுத்த ஒழுக்கங்கள் என்ன.. இனி அவர்களின் எதிர்காலம் என்ன, கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்ல நேரிடும், எதிர்காலம் அவர்களுக்கு என்னவாகும் என்பதும் பெரும் கேள்விதான். அப்பாவி இளைஞர்களை தவறாக வழிநடத்தியவர்கள், எப்போதும் போல் சந்தோஷமாக இருக்க போகிறார்கள். ஆனால் இனி தவறாக வழிநடத்தப்பட்ட இளைஞர்கள் வாழ்க்கை நிச்சயம் கேள்விக்குறி தான்?