ஜல்லிக்கட்டை பார்க்க சென்ற சிறுவன் மரணம்! துயரத்திலும் பெற்றோர் செய்த காரியும்! குவியும் பாராட்டு
தர்மபுரி: ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பார்க்கச் சென்ற 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் தங்கள் மகன் உயிரிழந்த சோகத்திலும் அவரது பெற்றோர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
தை மாதம் பிறந்தாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது பொங்கலும் அதை ஓட்டி மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தான். மாநிலத்தில் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
வாடிவாசலில் இருந்து சீறிப் பாயும் காளைகளை ஜல்லிக்கட்டு வீரர்கள் பாய்ந்து சென்று அடங்குவார்கள். இந்தாண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் ஜன.8ஆம் தேதி நடைபெற்றது.
சரியில்லையே.. முதல் ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தம்! மாட்டின் உரிமையாளர்கள் மீது போலீஸ் தடியடி!
ஜல்லிக்கட்டு
பொங்கல் விழாவுக்குப் பிறகு உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்றது. இப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. முறையான விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதால் திண்டுக்கல் நத்தம் கொசவபட்டி ஜல்லிக்கட்டு விழா பாதியிலேயே நிறுத்தப்பட்ட சம்பவமும் நடைபெற்றது.
தர்மபுரி
இப்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வரிசையாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தர்மபுரி தடங்கம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் 600 காளைகளும் 400 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியைக் காண அப்பகுதியில் இருந்து பல தரப்பு மக்கள் குவிந்து இருந்தனர். பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பார்க்க கேலரி அமைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்தபடி அவர்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பார்த்து ரசித்து வந்தனர்.
சிறுவன்
அங்கே பாலக்கோடு திரௌபதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பூ வியாபாரி சீனிவாசன் என்பவரின் மகன் கோகுல்.. அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வரும் கோகுல், தனது மாமா ஹரியுடன் ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்க்க வந்துள்ளார். கேலரியில் இருந்தபடி ஜல்லிக்கட்டை ஆர்வமாகப் பார்த்த கோகுல், ஒரு கட்டத்தில் ஆர்வ மிகுதியில் வாடி வாசலில் இருந்து வரும் காளைகளை அழைத்துச் செல்லும் இடத்திற்குச் சென்றுள்ளார். அங்கிருந்தபடி ஜல்லிக்கட்டைப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
உயிரிழப்பு
அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென காளை ஒன்று அவரது வயிற்றின் வலது பக்கம் முட்டியது. இதில் படுகாயமடைந்த கோகுல், உடனடியாக அங்குத் தயார் நிலையில் வைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவல் கிடைத்த உடன் மருத்துவமனைக்குச் சென்ற கோகுலின் பெற்றோர், தங்கள் மகனின் உயிரற்ற உடலைப் பார்த்துக் கதறி அழுதனர்.
கண் தானம்
இந்த சோகத்திலும் அந்த சிறுவனின் பெற்றோர் செய்த ஒரு செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்தது. அதாவது தங்கள் மகன் உயிரிழந்த சோகத்திலும் கூட அவர்கள், தங்கள் மகனின் கண்களைத் தானமாக வழங்கினர். அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவனின் கண்கள் தானமாகப் பெறப்பட்டது. தங்கள் சிறுவன் 14 வயதில் உயிரிழந்ததால்.. தனது மகன் வாழ வேண்டும் என்ற நோக்கில் கண்களைத் தானமாக அளித்துள்ளனர்.
தந்தை குற்றச்சாட்டு
இதையடுத்து சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவோர் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்றும் இதன் காரணமாகவே தனது மகன் உயிரிழந்தான் என்றும் அவரது தந்தை சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், தனது மகன் இறப்பிற்கு உரிய நிதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இதற்கு மாவட்ட நிர்வாகமும் போட்டியை நடத்துவோரும் தான் காரணம் என்றும் சாடியுள்ளனர்.