ஒரு தரம்.. ரெண்டு தரம்.. ஊராட்சிமன்றத் தலைவர் பதவி 25 லட்சத்துக்கு ஏலம்..!
தர்மபுரி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலும் நேற்று முன்தினம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை எனக்கூறி, உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ் உட்பட 10 க்கும் மேற்பட்ட அமைப்புகள், தனி நபர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்றும், உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.
மேலும் 1991 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்த நிலையில், திமுக தரப்பு கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவது உறுதியாகிவிட்டது.
இது ஒருபுறம் இருக்க, மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு லட்சம் தொடங்கி கோடி ரூபாய் வரை ஏலம் விடப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே அறங்கேறி வருகிறது. அப்படியொரு சம்பவம்தான் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் நடைபெற்றுள்ளது.
பென்னாகரம் தாலுக்காவிற்கு உட்பட்ட பனைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி 25 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வத்திமரதஅள்ளி, திருமல்வாடி, கூக்குட்டமருதஅள்ளி, மணல்பள்ளம் கிராமங்களுக்கான ஊராட்சிமன்ற தலைவர் பதவியை 25 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தவரைத் தவிர மற்ற யாரும் போட்டியிடுவதில்லை என ஊர்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதே ஊராட்சியில் கடந்த 2016 -ல் 35 லட்சத்துக்கு ஊராட்சிமன்ற தலைவர் பதவி ஏலம் போனதாகவும், தேர்தல் நின்றுபோனதால் பணம் திரும்ப தரப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதே ஊராட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகியுள்ளது. ஊராட்சிமன்ற தலைவர் பதவி ஏலம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட தேர்தல் துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதனிடையே உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை என்றும், சட்டத்திற்கும், மக்களாட்சி தத்துவத்திற்கும் புறம்பாக நடைபெறும் இத்தகைய செயல்கள் வருந்தத்தக்கவை எனவும், ஜனநாயகத்திற்கு ஊறுவிளைவிப்பதை தடுக்க தேர்தல் அலுவலர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எதுக்கு அகதிகளுக்காக ஒரு சட்டம்.. பேசாம பாகிஸ்தானையே அழித்துவிடலாம்.. ராஜ்யசபாவை அதிர வைத்த எம்.பி.!